அரசியல் அறிவிப்பிற்கு பிறகு ரஜினி டுவிட்டர் பக்கம் "சுறுசுறு"... கமல், அமிதாப்பச்சனுக்கு நன்றி!
அரசியல் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த கமல், அமிதாப்பச்சன் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்திலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவிற்கு ரஜினி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31, 2017 தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக திருப்பிப் போட்டுவிட்டது. 21 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி, சட்டசபைத் தேர்தலின் போது தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்றும் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரஜினி கட்சிக்கு கொள்கையே இல்லை, ஆன்மீக அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று ஒரு சிலர் எதிர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.
|
சகோதரர் ரஜினி என சொன்ன கமல்
எது எப்படியாயினும் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடத்தில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை வரவேற்று டுவீட் போட்டார். "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என்று டுவீட்டியிருந்தார்
|
அமிதாப் வாழ்த்து
இதே போன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், "என்னுடைய நண்பர், சக நடிகர், மனிதநேயமிக்க மனிதர், ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் தனது முடிவை அறிவித்துள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
|
ரஜினியால் மாற்றம் வரும்
ரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவும் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிச்சயம் அவர் மாற்றத்தை கொண்டு வருவார் என்றும் மோகன்பாபு ரஜினிக்கு வாழ்த்துகளை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
கமல், அமிதாப், மோகன்பாபுவிற்கு நன்றி
தனது அரசியல் வருகைக்கு வாழ்த்துகளை தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் மற்றும் மோகன்பாபுவிற்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று தனித்தனியே அவர்களின் டுவீட்டுகளுக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.