வேலூர் சிறையில் மோசமான உடல்நிலை.. ஒருவழியாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முருகன்
வேலூர்: சிறைக்குள் 13 வது நாளாக உணவு உண்ணாமல் இருக்கும் முருகனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வந்த நிலையில் அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் ஜீவசமாதி அடைய தனக்கு அனுமதி கேட்டு தமிழக முதல்வர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்தார்.
அனுமதி கிடைக்கவில்லை என்றபோதிலும், கடந்த 18ம் தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்தார். இந்நிலையில் முருகனின் உறவினர் தேன்மொழியை சிறை அதிகாரிகள் முருகனை சந்திக்க அனுமதி அளிக்க மறுத்தனர்.
இதனால், முருகனை சந்திக்க அனுமதி அளிக்க கோரி தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முருகனை சந்திக்க மனுதாரரை ஏன் அனுமதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், முருகன் பேசும் நிலையில் இல்லாததால் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார். இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே சிறையில், 13 வது நாளாக உணவு உண்ணாமல் இருந்த முருகனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் அவரை பாிசோதனை செய்த மருத்துவ அதிகாாிகள் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.
எனவே முருகனை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடா்பான அறிக்கையை தமிழக காவல் துறை நாளை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்தது. இந்த நிலையில், மருத்துவர்கள், சிறைத்துறை டிஐஜி பேச்சுவார்த்தையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் முருகன்.