மூன்று தமிழர் விடுதலை... என்ன செய்வார் ஜெயலலிதா?
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான நீண்ட சட்டப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
இந்த மூவரது தூக்கு தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மூவரும் 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்து வருவதால் அவர்களை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசை நோக்கி...
இதனால் மூன்று தமிழரது தூக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்பிய அனைவரது பார்வையும் கைகளும் தமிழக அரசை நோக்கி திரும்பியிருக்கிறது. தமிழக அரசு இது தொடர்பாக என்ன முடிவை அறிவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.
விடுதலை செய்யும்?
தமிழக அரசைப் பொறுத்தவரையில் நிச்சயமாக மூன்று தமிழரையும் விடுதலை செய்யவே வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கெனவே மூன்று தமிழரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனாலேயே அவர் நிச்சயம் மூன்று தமிழரை சிறையில் இருந்து விடுவிப்பார் என்றே கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக?
அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மூன்று தமிழரை விடுதலை செய்வதும் 'கை கொடுக்கும்' என்ற ஒரு கணக்கும் முதல்வருக்கும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சட்டசபையில் அறிவிப்பு?
சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளையே கூட இதற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.