இழந்து போன மன நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது; அனைவருக்கும் நன்றி: அற்புதம்மாள் கடிதம்
சென்னை: தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதி சதாசிவம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய திருப்பு முனை. இழந்து போன மன நிம்மதியை இது மீட்டிருக்கிறது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறி வாளன் தாயார் அற்புதம்மாள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதியுள்ளார்,

உயிர்வலி
தியாகராஜன் ஐ.பி.எஸ் அவர்களின் வாக்குமூலம் அடங்கிய ‘உயிர்வலி' ஆவணப்படம் வெளியான நாள் முதல் திருப்புமுனையாக அமைந்தது.

தீர்ந்த கொலைப்பழி
எங்கள் மீதான கொலைப்பழி நீங்கி, பேரறிவாளன், நிரபராதி என்பதை உலகிற்கு உணர்த்தியது.
மனநிம்மதி
நீதியரசர் சதாசிவம் அமர்வு அளித்த தீர்ப்பு இழந்து போன மனநிம்மதியை மீட்டு கொடுத்துள்ளது. இனி எனக்கு கெட்ட கனவுகள் வராது.
பதற்றம் அடையமாட்டேன்
இனி இரவுகளில் வரும் தொலைபேசி அழைப்புகள் என் ரத்தக் கொதிப்பை அதிகரிக்காது. இனி தொலைக்காட்சி செய்திகளை பதற்றத்துடன் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
மனமார்ந்த நன்றி
தூக்கு தண்டனையை ஒழிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய சதாசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த உலகெங்கும் நிறைந்துள்ள மனித நேய ஆர்வலர்களுக்கும் நன்றி.

என்னோடு பயணித்தவர்கள்
வலியும் வேதனையும் நிறைந்த எனது போராட்ட காலத்தில் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. திரு நெடுமாறன் தொடங்கி 99 வயதில் போராடும் கிருஷ்ணய்யர் வரை அனைவருக்கும் நன்றி.
செங்கொடிக்கு அர்ப்பணம்
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களுக்கு நன்றி. உயிர்தியாகம் செய்த செங்கொடிக்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன்.
கண்ணீரோடு நன்றி
என்னுடைய கண்ணீரையும், வேதனையையும் வெளிச்சம் போட்டு உலகிற்கு உணர்த்திய ஊடகவியலாளர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
விடுதலைக்கு பாடுபடுவோம்
தமிழ் உணர்வாளர்களும், மனிதநேய ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு மூவரின் விடுதலையை விரைவு படுத்த பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் அற்புதம்மாள்.












Click it and Unblock the Notifications