முதல்வர் ஜெயலலிதாவுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு- நன்றி தெரிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளாக இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இவர்கள் 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை சந்தித்த அவரது தாயார் அற்புதம்மாள் கூறுகையில், ''தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இயற்றப்பட்ட ஒரு வரலாற்று தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றியும், அங்கீகாரமும் தான் இந்த தீர்ப்பு.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி, இன்னும் இரு தினங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எனது கோரிக்கையை முறையிட உள்ளேன். தாயுள்ளம் கொண்டு அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்'' என்றார்.