Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரம் பேச வசதியாக ஸ்டார் ஹோட்டலில் நேர்காணல்: மிகப்பெரிய ஊழலுக்கான ஆதாரம்.. விளாசும் ராமதாஸ்

மின்சார வாரியத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படுவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய காலிப் பணியிடங்களுக்கான நேர்க்காணல் ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படவுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரம் பேச வசதியாக ஸ்டார் ஹோட்டலில் நேர்காணல் நடத்தப்படவுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மிகப்பெரிய ஊழல் நடைபெறவுள்ளது என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் சாடியுள்ளார்.தனியார் நட்சத்திர விடுதியில் 13-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் 13&ஆம் தேதி முதல் 18&ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரான, ஊழலுக்கு வழிவகுக்கக் கூடிய தமிழ்நாடு மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

முறைகேடு செய்ய வேண்டும்

முறைகேடு செய்ய வேண்டும்

மின்சாரவாரியத்திற்கு 300 மின்னியல் உதவிப் பொறியாளர்கள், 25 எந்திரவியல் உதவி பொறியாளர்கள், 50 சிவில் உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 375 உதவிப் பொறியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 28.12.2015 அன்று வெளியிடப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 31.01.2016 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தகுதி காண் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வரும் 13-ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது. மின்னியல் உதவி பொறியாளர்களுக்கு 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையும், மற்ற பிரிவு உதவிப் பொறியாளர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளிலும் அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேர்காணலில் பெரும் முறைகேடு செய்ய வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

நட்சத்திர விடுதியில் நடத்த தேவை என்ன?

நட்சத்திர விடுதியில் நடத்த தேவை என்ன?

ரூ1.13 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு மாநாடு நடத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இதுவரை மின்சார வாரியம் சார்ந்த அனைத்து நேர்காணல்களும் அங்கு தான் நடைபெற்றிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, உதவி பொறியாளர்களுக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்த வேண்டிய தேவை என்ன? தேசிய அளவிலோ, மாநில அளவிலோ எந்த பணிக்கான நேர்காணலும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற வரலாறு இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பதவிக்கான நேர்காணல் கூட சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் தான் நடந்ததே தவிர, நட்சத்திர விடுதியில் அல்ல.

மிகப்பெரிய ஊழலுக்கு ஆதாரம்

மிகப்பெரிய ஊழலுக்கு ஆதாரம்

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களைப் பொறுத்தவரை நேர்காணல்களில் தான் மிக அதிக அளவில் முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நேர்காணல் நடக்கும் அறையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் நேர்காணல் நடத்துவதற்கான அறையில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி அங்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்திருந்தால், அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால், அதைவிடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்துவதன் நோக்கம் தரகர்கள் தடையின்றி நடமாடவும், நேர்காணலுக்கு வருபவர்களிடம் அந்த இடத்திலேயே பேரம் பேசுவதற்கும் வசதி செய்தி தருவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெறப்போகிறது என்பதற்கு இது தான் சிறந்த ஆதாரம் ஆகும்.

ஏற்றுகொள்ள முடியாத ஊதாரித்தனமாகும்

ஏற்றுகொள்ள முடியாத ஊதாரித்தனமாகும்

ஒருவேளை வசதி கருதி தான் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வளவு வீண் செலவுகளை தாங்கும் வகையிலா தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலைமை இருக்கிறது? ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கடந்த 5 ஆண்டுகளில் இரு முறை மின்கட்டணங்களை மின்சார வாரியம் உயர்த்தியிருக்கிறது. மின் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லாமல் தடுமாறும் சூழலில் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்துவது ஏற்றுகொள்ள முடியாத ஊதாரித்தனமாகும்.

முறைகேடுகள் பெருக வழிவகுக்கும்

முறைகேடுகள் பெருக வழிவகுக்கும்

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மின்வாரியப் பணியாளர் வாரியம் என தனித்தனி தேர்வு வாரியங்கள் செயல்படுவது செயல்படுவது பணியாளர் நியமனத்தில் ஊழலும், முறைகேடுகளும் பெருகுவதற்கே வழி வகுக்கும்.

போராட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கை

போராட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கை

எனவே, தனியார் நட்சத்திர விடுதியில் 13-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால், வரும் 13-ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவிருக்கும் சென்னை அரும்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+