சாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முடிவெடுப்பது அவசியம் - ராமதாஸ்
சென்னை: சாப்ட்வேர் நிறுவனத்தின் தொழிலாளர் குறைப்பு நடவடிக்கையை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில், "ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டதால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், அதைவிட பெரிய துரோகத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செய்ய முடியாது.

சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக்கூடாது.
ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. எனவே, சாப்ட்வேர் நிறுவன தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளும் தலையிட்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications