ஆர்.கே.நகரில் 1.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெ. வெற்றி என்று ஊதடா சங்கை: 'கலாய்க்கும்' ராமதாஸ்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, 1.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி என்று ஊதடா சங்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டார். நேற்று நடந்த இடைத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
|
ஜெ. வெற்றி ஊதடா சங்கை
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘ஆர்.கே. நகர் தொகுதியில் 75% வாக்குப்பதிவு: 1.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி என்று ஊதடா சங்கை!' எனக் கிண்டலாக கூறியுள்ளார்.
|
இதற்கு தான் காத்திருந்தாய் பன்னீர்
மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாளை மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா தொடங்கி வைப்பார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்: இதற்காகத் தானே காத்திருந்தாய் பன்னீர் செல்வம்!' எனத் தெரிவித்துள்ளார்.
பாலை வார்க்க வேண்டும்
இது தவிர, ‘பாலை தரையில் கொட்டும் போராட்டம் தொடர்கிறது: உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்' என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
தங்க மனசு
மேலும், காவிரியில் தண்ணீர் திறப்பதில் பிரச்சினையில்லை என்ற சித்தராமய்யாவின் பேச்சை, ‘ஆகா... என்ன தாராள மனசு... என்ன தங்க மனசு!' என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.