அரசியலில் பண்பு, நாகரீகம் உள்ளவர் கருணாநிதி: டாக்டர் ராமதாஸ்
சென்னை: அரசியலில் பண்பு, நாகரீகம் உள்ளவர் கருணாநிதி என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தனது பேரன் பேத்தியின் திருமணத்திற்கு வந்த கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழா மகாபலிபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தமது அழைப்பை ஏற்று திருமண விழாவிற்கு வந்த கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி கூறினார்.
தங்களின் பல ஆண்டுகால நட்பினை யாராலும் பிரிக்க முடியாது என்றார். 1989 முதல் எனக்கும் கருணாநிதிக்குமான நட்பு தொடர்கிறது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
அரசியல் நாகரீகம்
அரசியலில் பண்பும் நாகரீகமும் கொண்டவர் கருணாநிதி, அவரது கடின உழைப்பை யாரும் மிஞ்ச முடியாது என்ற டாக்டர் ராமதாஸ், கட்சியை கருணாநிதி நடத்தும் பாங்கை கண்டு பாடம் கற்றேன் என்றும் கூறினார்.
மகிழ்ச்சியில் திளைக்கிறேன்
மகிழ்ச்சியில் திகைக்கிறேன் என்பார்கள் அதை இன்று நான் உணர்கிறேன். உடல் நலன் இல்லாததால் கலைஞர் வருவாரா என்று கூறினார்கள். ஆனால் எனக்கு தெரியும். அவர் எப்படியும் வருவார் என்று. அந்த வகையில் நேரில் வந்து வாழ்த்திய அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மிகப்பெரிய ஒற்றுமை
92 வயது மூத்த முத்தமிழ் அறிஞர் நேரில் வந்து வாழ்த்து பெறுவது அரிய பேறு. எனக்கும், கலைஞருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். பேரன், பேத்திகளை கடந்து கொள்ளு பேரன்-பேத்திகளை பெற்றவர்கள் நாங்கள். அது யாருக்கு வாய்க்காது. எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது பழக்கமல்ல. மல்லநட்பு.
கைது செய்த போது
1989 ஆம்ஆண்டு ஆலிவர்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இட ஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது. எதிர் அணியில் இருந்த போதும் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆனதும் அவரை கைது செய்த போது உடனடியாக விடாவிட்டால் உண்ணாவிரம் இருப்பேன் என்றேன்.
நட்பு மாறாது
அவரை உடனே விடுதலை செய்தார்கள். அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். நாங்கள் எந்த அணியில் இருந்தாலும் எங்கள் நட்பு மாறுவதில்லை. சில நேரங்களில் ஒரே அணியில் இருந்தாலும் ஆக்கப் பூர்வமான கருத்துக்களை நான் சொல்லத் தயங்கியது இல்லை.
அவரை மிஞ்சமுடியாது
எங்களுக்குள் சிறு வேற்றுமை உண்டு. நான் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். அவர் யோசித்து நளினமாக இரு பொருள் படும்படி நயமாக சொல்வார். அப்படி சொல்வதில் எந்த தலைவரும் அவரை மிஞ்ச முடியாது.
சிறந்த நிர்வாகி
அவரிடம் இன்னும் நான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரது உழைப்பு, நேர நிர்வாகம், கட்சியை நடத்தும் பாங்கு ஆகிய மூன்றையும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.