வானத்தைப் பார்த்து வானிலை முன்னறிவிப்பு சொல்வதா? ரமணனை கிண்டலடிக்கும் அன்புமணி
சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வானத்தை பார்த்து விட்டு வானிலையை கணிப்பதாக பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி லோக்சபா தொகுதி எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "நியூயார்க் நகரத்தில் நான் பார்த்து இருக்கிறேன். அமெரிக்காவில் நியூயார்க், புருக்ளீன், மன்ஹட்டன், குயின்ஸ்ப்ரோ என பல பகுதிகள் இருக்கிறது. இந்த பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன்பே மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி ஒரு வாரம் கழித்து சொன்னபடியே மழை பெய்யும். தொலைக்காட்சிகளில் அறிக்கைகள் வெளியிடப்படும்.
ஆனால், இங்கே தமிழகத்தில் நம்முடைய ரமணன் இருக்கிறார். மழை பெய்து முடித்த பிறகு சொல்லுவார். சென்னையிலே பரவலாக மழை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமான மழை, பலமான மழை என்று. இது என்வென்று எனக்கு புரியவில்லை.
வானத்தைப் பார்த்து வானிலை
இதில் என்ன விஞ்ஞானம் இருக்கிறது. நான் நினைக்கிறேன், ரமணன் தினமும் வீட்டுக்கு வெளியே போய் வானத்தை பார்த்து விட்டு ஓகே, 'இன்றைக்கு மழை பெய்யும், இன்றைக்கு வெயில் அடிக்கும்' என கணிக்கிறார். அத்தகைய தொழில் நுட்பத்தைதான் இங்கே வைத்திருக்கிறோம்.
செயற்கைக்கோள் இல்லையே
இங்கு சாட்டிலைட் கிடையாது, ஒண்ணும் கிடையாது. வெளிநாட்டில் இருக்கிற தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வர வேண்டும். விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் கணிப்பு
பருவமழை எப்போது வரும், எந்த சீசனில் வரும், எங்கிருந்து வரும், எப்படி வரும் இதையெல்லாம் சுலபமாக மற்ற நாடுகளில் சொல்வதை பார்த்து விட்டு வருகிறோம். அந்த தொழில் நுட்ப முன்னேற்றங்களை இங்கே கொண்டு வரணும். ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும் வரைக்கும் அது வர வாய்ப்பே இல்லை என்றார் அன்புமணி.
ரமணன் ரசிகர்கள்
அன்புமணியின் கிண்டல் ரமணன் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்யப்போகிறது. ரமணன் புண்ணியத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அனுபவிக்கும் மாணவர்கள் அன்புமணியிடம் சண்டைக்கு போகாமல் இருந்தால் சரிதான்.