காதலுக்காக ராம்குமார், கள்ளக்காதலுக்காக இளையராஜா.. புழல் சிறையை அதிர வைத்த இரு தற்கொலைகள்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த பரபரப்புக்கு பிறகு, இப்போது தீயணைப்பு வீரர் இளையராஜா என்பவர் புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்குமார் தற்கொலை ஒரு தலைக்காதல் தொடர்பானது என்றால், இளைராஜாவின் தற்கொலை கள்ளக்காதல் தொடர்புள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, கடந்த வருடம் ஜூன் 24ம் தேதி காலை 6.45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு ஜூன் 27ம் தேதி சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
ராம்குமார் கைது
இதனையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. கொலை நடந்து சரியாக 7 நாட்களுக்குப் பிறகு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிப்பதிவின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தவர் என ஜூலை 2ம் தேதி அறிவித்தனர்.
கழுத்தை அறுத்ததாக தகவல்
கைது செய்யப்படும்போது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ராம்குமாருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் பலத்த பாதுகாப்புடன் ஜூலை 3ம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், சிகிச்சை முடிந்து ஜூலை 5ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்கொலை என அறிவிப்பு
இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாயில் மின்சார கம்பியை கடித்துக்கொண்டு ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவித்தபோது, சுவாதி ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர், கொலை வழக்கை அப்பாவியை கொண்டு மூடி மறைக்க காவல்துறை முயன்றதாக குற்றம்சாட்டியவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருவேறுபட்ட மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது அந்த சம்பவம்.
மர்மங்கள்
ஆரம்பம் முதலே சுவாதி கொலை வழக்கில் பல மர்மங்கள் இருந்தன. ராம்குமார் கைது, அவர் வீட்டின் அருகே தற்கொலை செய்ய முயன்றது என பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் முன்பே அவர் தற்கொலை செய்ததாக கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது நீதியின் மீதும், அரசின் மீதும் நம்பிக்கை கொண்டோரை, கிடுகிடுக்கச் செய்தது. இதுவரை அந்த மர்மம் விலகவில்லை. ராம்குமார் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாகவும், அவர் ஏற்க மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
பரபரப்பு புழல்
இந்த நிலையில், இன்று புழல் சிறை மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளது. கோவையை சேர்ந்த ஆசிரியை நிவேதிதா என்பவரை சென்னையில் வைத்து காரை ஏற்றி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தீயணைப்பு படை வீரர் இளையராஜா என்பவர் புழல் சிறையில், தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
பாதுகாப்பு கேள்விக்குறி
பாதுகாப்பு மிக்க புழல் சிறையில் அரங்கேறும், இதுபோன்ற மர்ம மரணங்கள், சிறைத்துறை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது. தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கே அதிகாரம் உள்ள நிலையில், சிறைக்குள் தனியாக பஞ்சாயத்து நடக்கிறதா என்ற கேள்வியை இவ்விரு சம்பவங்களும் எழுப்புகின்றன. ராம்குமார் காதல் விவகாரத்திலும், இளையராஜா கள்ளக்காதல் விவகாரத்திலும் பலியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. காதலோ, கள்ளக்காதலோ, கதை முடிக்கப்படும் இடமாக புழல் மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாவம் அந்த பெண்
இந்த சம்பவத்தில் ஒரு தவறுமே செய்யாது, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இளையராஜாவின் மனைவிதான். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த, நிவேதிதாவுடன் கள்ளக்காதல் வைத்திருந்தார் இளையராஜா. ஆனால் இது போதாது என்று, தனக்கென்று ஒரு மனைவியையும் திருமணம் மூலம் இணைத்துக்கொண்டார். ஆனால், அதன்பிறகும், நிவேதிதாவுடன்தான் மையல் கொண்டு அலைந்தார். இப்போது அந்த கள்ளக்காதலுக்காக மனைவி வாழ்க்கையை பற்றி சிந்திக்காமல், கொலை, பிறகு தற்கொலை என வாழ்க்கையை நகர்த்தியுள்ளார் இளையராஜா. இப்போது கள்ளக்காதலி கொல்லப்பட, காதலன் இளையராஜா தற்கொலை செய்துகொண்ட நிலையில், நிர்கதியாக நிற்கிறார் இளையராஜா மனைவி. இதற்கு, நிவேதிதாவையே இளையராஜா திருமணம் செய்துகொண்டிருந்தாலோ, அல்லது யாரையுமே திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலோ, ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையாவது தப்பியிருக்கும்.