கடைசி வரை என்கவுண்டர் பயத்திலேயே சிறை வாசத்தைக் கழித்த ராம்குமார்!
சென்னை: போலீசார் என்னை என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என்று உட னிருந்த கைதிகளிடம் ராம்குமார் கேட்டிருக்கிறார். போலீசார் எதையாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்குள் இருந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதற்றத்தில்தான் அவர் இருந்தார் என்று சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1ம் தேதி நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார்.
சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பின் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறையில் ராம்குமார்
ராம்குமார் நேற்று முழுவதும் அமைதியாகவே இருந்ததாகவும், காலையில் சாப்பிட்ட அவர், மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை என்றும் சிறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மின் வயரை கடித்து மரணம்
மாலை 4.45 மணிக்கு தண்ணீர் குடிக்கப் போனபோது அவர் மின்சார வயரை கடித்து மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
மரணத்தில் சந்தேகம்
ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளனர். சிலரோ நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
போலீஸ் காவலில் ராம்குமார்
போலீஸ் காவலில் ராம்குமாரிடம், சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது "எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை" என்று வாக்குமூலத் தில் ராம்குமார் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.
ராம்குமார் மறுப்பு
சுவாதி கொலை குறித்து அவரது நண்பர் பிலால் மாலிக் மற்றும் தோழிகளிடம் போலீசார் பல நாட்கள் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலை வழக்கில் விசாரணை விவரங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் போலீசார் ரகசியமாகவே வைத்திருந்தனர்.
நீதிபதி முன்பு ஆஜரான ராம்குமார், "நான் இந்த கொலையை செய்யவில்லை. எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார். மேலும், கையெழுத்து சோதனைக்கும் மறுப்பு தெரிவித்தார்.
சிறையில் கவுன்சிலிங்
போலீசார் பிடிக்க முயன்றபோதே ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார் என்று போலீசார், கழுத்தில் வெட்டுப்பட்ட ராம்குமாரின் புகைப்படத்தை வெளியிட்டனர். பின்னர் ராம்குமாருக்கு தற்கொலை எண்ணம் போக, சிறையில் கவுன்சலிங் அளிக்கப்பட்டதாக கூறப் பட்டது.
எழும் சந்தேகங்கள்
ராம்குமாரையும் யாரிடமும் பேசவிடாமல் போலீசார் பார்த்துக் கொண்டனர். அவர் கைது செய்யப்பட்டபோதும், அவரது கழுத்து அறுபட்டு யாரிடமும் பேச முடியாத நிலையில் கொண்டு வந்தனர். அப்போதே பல சந்தேகங்கள் இந்த வழக்கில் எழுந்தன. தற்கொலை முயற்சி செய்தவரை சிறை நிர்வாகம் எப்படி தனியே விடும் . சிறையில் ராம்குமார் மின் வயரை எடுத்து பல்லால் கடிக்கும் அளவுக்கு நீளமாகவும், எளிதாகவும் வைக்கப்பட்டு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மின்வயரை கடிக்க முடியுமா?
சாதாரண மின் இணைப்பை கடித்து தற்கொலை செய்ய முடியாது. அப்படி கடிக்கும்போது அனிச்சை செயலாக அவர்களே மின்சார கம்பியை விட்டுவிடுவார்கள் என்பது பிரபல மருத்துவர்களின் கருத்தாகும். விசாரணைக் கைதி சமையல் அறைப்பக்கம் செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.
விடை தெரியாத கேள்விகள்
சுவாதி கொலையில் கைதாகி 80 நாட்கள் சிறையில் இருந்த ராம்குமார் தனக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நேரலாம் என்ற ஒருவித பதற்றத்துடனேயே நடமாடி வந்துள்ளார். ஆனால் மின்சார வயரை கடித்து அவர் மரணமடைந்து விட்டதாக கூறுகிறது போலீஸ். சுவாதி கொலையைப் போல ராம்குமாரின் மரணமும் விடை தெரியாத கேள்விகளுடன் மூடப்பட்டு விடும் என்பதே உண்மை.