விழுப்புரம், சிறுவாலையில் கிடைத்த அரிய தொல்லியல் உயிர் ஓவியம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அன்னியூரை அடுத்த சிறுவாலையில் தொல்லியல் உயிர் ஓவியங்கள் கிடைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அன்னியூரை அடுத்த கீழ்வாலை, செத்தவரை முதலான இடங்களில் கிடைத்துள்ள கி.மு 3000க்கும் முந்தையதாக கணிக்கத்தக்க பழங்கால ஓவியங்கள் தற்போது சிறுவாலையிலும் கிடைத்துள்ளது.
ஊருக்கு கிழக்கே இயற்கையாக அமைந்த பல்வேறு குகைதளங்களைக் கொண்ட சிறு சிறு குன்றுகள் பல அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றையும் அவ்வூர் மக்கள் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு பாறையிலும் பல்வேறு நாட்டார் தெய்வ வழிபாடுகளை நடத்தி இதுவரை காத்து வந்துள்ளனர்.
இவை பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றின் தடங்களைச் சுமந்து உயிர்வாழ்வதை அறியாத மக்கள் அண்மை காலமாய் ஆளாளுக்கு பங்குபோட்டு பிரித்து வெடிவைத்து பிளந்துள்ளனர்.
வெடிவைத்து தகர்க்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாய் இருக்கும் ரயில்பெட்டி பாறை எனப்படும் குன்றின் ஒரு பகுதியில் தான் ஒன்றரை மீட்டர் நீலமும், 50 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட அந்த தொல்பழங்கால ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
அதை சோதனை செய்து பார்த்தபோது அது ஒரு இனக்குழு, வேட்டையாடிய பின் உணவுகளைப் பாதீட்டுக்கு எடுத்துச் செல்வதைச் சொல்லும் ஓவியம் என அறிய முடிந்தது.
முதல்பகுதியில் தலைவி எனக் கருதத்தக்க வகையில் சடாமுடியுடன் பெரிய உருவம் காணப்படுகிறது. அவ்வுருவத்தைச் சூழ்ந்து ஐந்து சிறிய உருவங்கள் காணப்படுகின்றன. பின்பக்கம் உள்ள உருவங்கள் ஒருப்பக்கம் கையைப் பிணைத்துக் கொண்டு உள்ளன. (சடங்கு அல்லது ஆட்டம் எனவும் கொள்ளலாம்,)
அடுத்து, இரண்டு சக்கரங்கள் காணப்படுகின்றன. (முதலில் உள்ள சக்கரம் முக்கால்வாசி மட்டுமே தெரிகிறது). அவைகள் இரண்டும் தனித் தனி வண்டிகள் போல உள்ளன. அவைகளின் மேல் உள்ள உருவத்தை அறிய முடியவில்லை. அவற்றின் முன்னால் உள்ள பகுதியில் ஏதேனும் விலங்குகள் வண்டியை இழுப்பதற்கான தடயமும் இல்லை.
ஒரு வேளை மேற்படி சொன்ன தலைவியின் பின்னால் உள்ள கைபிணைத்த மனித உருவங்கள் இழுத்து வருவதாக கொள்ளவும் இடம் உள்ளது.
அவ்வண்டிகளின் பின்னால் பெரியதும், சிறியதுமான இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவை அவ்வண்டிகளின் பின்னால் காவல் காத்தபடி வருவதாகவோ, வண்டியை மேட்டுப் பகுதிகளில் பின்னிருந்தபடி தள்ளி விடுபவர்களாகவோ கொள்ளலாம்.
ஆக, தலைவி புடைசூழ வேட்டையாடிய பின் வேட்டையாடிய பொருட்களை வண்டியில் வைத்து தம் இருப்பிடத்திற்கு இழுத்து செல்வதான ஓவியமாக இதனைக் கணிக்க முடிகிறது.
இந்த அரிய தொல்லியல் ஓவியத்தை தொல்லியல் ஆய்வாளர்கள், செல்வன், ரவி, அதியன், செந்தில் பாலா ஆகியோர் கண்டறிந்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.