குழந்தை உயிரை காப்பாற்ற துடித்த 'ஒன்இந்தியா' வாசகர் இதயங்கள்.. குவிந்த மெயில்கள்!
சென்னை: அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் நோயை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு வெளியிட்ட செய்திக்கு நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்து குவிந்துள்ளது.
சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி, அரிதிலும் அரிதான TTP (Thrombotic Thrombocytopenic Purpura) என்ற வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தட்ஸ்தமிழிலில்' நேற்று மாலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். சிறுமியின் உறவுக்காரர் ஒருவர் நமது இணையதளத்தை தொடர்புகொண்டு, கேட்டுக் கொண்டதிற்கிணங்க அச்செய்தி வெளியாகியிருந்தது.

சிறுமி எந்த வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து டாக்டர்களாக கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதேபோன்ற பாதிப்பு வாசகர்களுக்கு தெரிந்த யாருக்காவது ஏற்பட்டிருந்தாலோ, அது குணமடைந்திருந்தாலோ தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.
செய்தி வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து ஏகப்பட்ட பதிலுரைகள் தட்ஸ்தமிழ் அளித்த இ-மெயில் முகவரிக்கு வந்து குவிந்தன. நாடு, மதம், இனம் கடந்து மனித நேயம் என்ற முகவரியை மட்டுமே தாங்கி வந்தன இ-மெயில்கள். அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியாவின் பல நகரங்களில் இருந்து இ-மெயில்கள் கிடைக்கப்பெற்றன.
சில அன்பர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அதுபோன்ற பிரச்சினை இருந்ததாக கூறி தொடர்புக்கு தொலைபேசி எண்களை அளித்து உதவினர். பலரும் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி, இணையதளத்தில் இந்த நோய் பற்றிய தகவல்களை சேகரித்து அவற்றின் லிங்குகளை அனுப்பி வைத்தனர். சில மனிதநேயர்கள், யூடியூப் லிங்குகளை அனுப்பி வைத்தனர்.
சிலர் டாக்டர்கள் தொடர்பு எண்களையும், சிலர் சித்த வைத்தியர்களின் தொடர்பு எண்களையும் அளித்து உதவினர். ஆன்மீக ரீதியாகவும் பலனடைவது எப்படி என்பது பற்றிய யோசனைகளும் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் ஒன்றுவிடாமல், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகவல்களை பார்வேர்ட் செய்வதற்குள் தலை சுற்றிவிட்டது. அந்த அளவுக்கு குவிந்தன அன்பர்களின் மெயில்கள்.
சக மனிதருக்கு ஒரு பிரச்சினை எனும்போது மேல்தட்டு, படித்த மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற பொது வதந்தியை உடைத்தது நமது வாசகர்களின் அக்கறை. ஒவ்வொருக்கும் தனியாக நன்றி சொல்ல கால அவகாசம் போதவில்லை என்பதால் இந்த பதிவின் மூலம் உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தை நலம் பெற பிரார்த்திப்போம்.












Click it and Unblock the Notifications