விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற கூடாது.. தடையை நீட்டித்தது ஹைகோர்ட்
சென்னை: விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய மேலும் 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அதற்கான காரணம் விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றியதே என்றும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்சட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிமகாதேவன் ஆகியோர் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அரசாணையை தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 2008, பிரிவு 22-ஏ-வின்படி இந்த அரசாணை, கடந்த (2016ம் ஆண்டு) அக்டோபர் 20-ந்தேதி பிறப்பிக்கப்படுகிறது. இந்த அரசாணை உட்பிரிவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தும், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது' என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை படித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?' என்பதை முதலில் அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து, ஏற்கனவே பிறப்பித்த தடையை அகற்ற மறுத்து விட்டனர்.
அந்த வழக்கானது பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு ரமேஷ், நீதிபதி மகாதேவன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாதுரையிடம் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், கூடுதல் கால அவகாசம் கோரினார். அப்போது குறுக்கிட்ட ரியல் எஸ்டேட் தரப்பு வழக்கறிஞர், மூன்று முதல்வர்கள் மாறியும் வீட்டுமனை சட்டத்தை முமறைப்படுத்துவதற்கான அரசு உரிய முடிவை தமிழக அரசு எடுக்கவில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்வதற்கான தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. பத்திரப் பதிவு தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க இதுவே இறுதிக் கெடுவாகும். முடிவு எடுத்தப்பின்னர் தடை நீக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவித்தனர்.