இன்னும் 2 மாதத்தில் மழை வரப் போகிறது.. செம்பரம்பாக்கம் ஏரியை "சீவி சிங்காரிக்கும்" பொதுப்பணித்துறை!
சென்னை: மழைக்காலம் தொடங்க உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியை 3 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழை பெய்தால் மகிழ்ச்சியில் மூழ்க வேண்டிய சென்னை மக்கள் சோகத்தில் மூழ்கினர். நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மூழ்கியது.
மழை வெள்ளத்தில் சென்னை மூழ்க காரணம் அளவிற்கு அதிகமான மழையே என்றாலும் உடனடிக் காரணமாகவும் முதல் காரணமாகவும் மக்களால் குற்றம்சாட்டப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதுதான். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை சீரமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலை தீவிரமடைந்துள்ளன.
கரைகள் அரிப்பு
கடந்து ஆண்டு பெய்த மழைக்கு முன்னரே செம்பரம்பாக்கம் ஏரி தூர் வாரப்படாமலும், அதன் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டும் சீரழிந்து கிடந்தது. இதனால் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கும் முக்கிய ஏரியே சென்னையை மூழ்கடிக்கும் நிலைக்கு ஆளானது. அப்போது ஏரி உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இதனையடுத்து தற்காலிக மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு ஏரி பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஏரியின் கரைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
தடுப்பு சுவர்கள் இல்லை
செம்பரம்பாக்கம் ஏரியின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர்கள் இல்லை. அந்த வழியாக யார் வாகனத்தில் சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை. எப்போது வேண்டுமானாலும் நிலை தடுமாறி கீழே விழலாம் என்ற சூழலே அங்கு நிலவுகிறது. இதனை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 27 லட்சம் செலவில் தடுப்பு சுவர்கள் மற்றும் மதகுகளில் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மழை நீர் வடிகால்வாய்
ஒரு கோடியே 40 லட்சம் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏரிக்கரையின் மேலிருந்து வழியும் மழைநீர் வீணாகாமல் இருக்க கீழ்ப்பகுதியில் ரூ 43 லட்சம் செலவில் கால்வாய் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
இதர பணிகள்
முப்பது லட்ச ரூபாய் செலவில் 5 கண் மற்றும் 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அரிப்பு ஏற்பட்ட கரைப்பகுதிகளில் மண் கொட்டப்பட்டு கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.