டெங்கு காய்ச்சலுக்கு மருத்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி... மருத்துவ கருத்தரங்கில் தகவல்
நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக அளவிலும், இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருவதாக நெல்லை மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பின் நெல்லை கிளை மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை இணைந்து நடத்திய மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் மற்றும் புதிய மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நெல்லை மருத்துவ கல்லூரியில் நடந்தது.
இதற்கு நெல்லை மருத்துவ கல்லூரி டீன் சித்தி அத்திய முனைவரா தலைமை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் எட்வின் வரவேற்றார்.
அப்போது விழாவில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் விஸ்வநாதன் பேசுகையில், 'டெங்கு காய்ச்சல் முழுக்க முழுக்க கொசுவால் பரவுகிறது. இதை குணப்படுத்த இதுவரை நேரடியாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிப்பதற்கு உலக அளவிலும், இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவித்தினருக்கும் குறைவானவர்களே உயிர் இழப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல் மூளை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உயிர் இழக்கின்றனர்.
பிளேட் லெட் எனப்படும் இரத்த அணுக்கள் 20 ஆயிரத்திற்கு குறைந்தால் ரத்த அணுக்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் நோயாளி ஓரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது மிக அவசியம்' என்றார்.
இந்த கருத்தரங்கில் தென்னக்கத்தை சேர்ந்த 400 டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று நீரிழவு நோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.