செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பவில்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்
மழை வெள்ளம் காரணமாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: ஏரிகள் எதுவும் நிரம்பவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். ஆதாரப்பூர்வமாக ஊடகங்களில் வரும் தகவல்களை மட்டுமே நம்புங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் - போரூர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி பேருந்துநிலையம், நீதிமன்றம், அண்ணா அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் நீர் தேங்கியுள்ளது. பூந்தமல்லி - ஆவடி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண மீட்பு பணிகள் பற்றி சென்னை எழிலகத்தில் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக கூறினார்.
வெள்ளநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இருப்பவர்கள் உடனே வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு முழுக்க விடிய விடிய வேலை செய்து சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்ததாகவும் தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டதாகவும், திறந்து விடப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம். ஏரிகள், நீர் நிலைகள் இன்னும் முழு கொள்ளளவை எட்டவில்லை. எனவே அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்புங்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
ஏரிகளை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கண்காணிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் பழவந்தாங்கள், துரைசாமி சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. கனமழை காரணமாக இரும்புலியூர், கணேஷபுரம், கெங்கு ஈவெரா சுங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications