அரவிந்தர் ஆசிரமம் மீது புகார்: விசாரணையை தொடங்கியது கமிஷன்!

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் புகார், நிதி மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இதையொட்டி புதுச்சேரி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, சப்-கலெக்டர் விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புதுவை அரசு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையிலான குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதி அறிவித்தார். இதன்படி அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அதன்படி, விசாரணை கமிஷன், புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு விசாரணையை தொடங்கியது. அரவிந்தர் ஆசிரம நிர்வாக இயக்குனர் மனோஜ்குப்தா, செயலாளர் மேட்ரி பிரகாஜ் உள்பட 27 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தின் மீது கூறப்படும் பாலியல் புகார், மனித உரிமை மீறல், ஆசிரமவாசிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட பிரச்னை, நிதி மற்றும் சொத்தில் நடந்த முறைகேடு ஆகியவை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரவிந்தர் ஆசிரமம் மீது விசாரணை தொடங்கியுள்ளது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications