ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதால், எடப்பாடி அரசுக்கு ஆபத்தா?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி கலையுமோ என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த தேர்தல் முடிவு தமிழக அரசில் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு இரு காரணங்கள் முக்கியமானவை.

இரு காரணங்கள்
ஒரு காரணம், மத்திய பாஜக அரசு இனிமேல் எடப்பாடி அரசை எப்படி கையாளப்போகிறது என்ற கேள்விக்கான விடை. மற்றொரு காரணம், தினகரன் தரப்பு இனி எப்படி பலம் பெறப்போகிறது என்ற கேள்விக்கு கிடைக்கப்போகும் விடை.

சசிகலா தரப்பை வீக் செய்ய முயற்சி
இதுவரை எடப்பாடி அரசை பலவகைகளிலும் பக்கபலமாக இருந்து காப்பாற்றி வருகிறது மத்திய அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பிலும் பாஜக முக்கிய பங்கு வகித்ததாக கூறுவர். இவ்வாறு இந்த தரப்பை பலப்படுத்தி சசிகலா தரப்பை வீக் செய்ய வேண்டும் என்பதே திட்டமாம்.

பணப்பட்டுவாடா அருமை
ஆனால், மத்திய அரசு ஏஜென்சிகள் மூலம் ரெய்டு நடத்தியும், மாநில போலீசார் கெடுபிடிகளை தாண்டியும், தினகரன் தரப்பு சுலபமாக பணப்பட்டுவாடா நடத்தி ஆர்.கே.நகரில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவரை நாம் ஏன் கைக்குள் வைத்துக்கொள்ள கூடாது என்பதே பாஜக எண்ணம். அப்படி நடந்தால் எடப்பாடி அரசுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும்.

தினகரன் தரப்பு நெருக்கடி
இன்னொரு விஷயம், தினகரன் தரப்பு இனி பலம் பெறும் என்பதுதான். முதல்வரை மாற்றிவிட்டு தினகரனை முதல்வராக முன்னிறுத்தி ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் அவருடன் இணைந்து கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. ஒருவேளை அப்படி செய்யாவிட்டால் இந்த வெற்றியை காரணமாக வைத்து ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சிலர் தினகரன் பக்கம் விசுவாசம் காட்டினாலும் ஆட்சிக்கு ஆபத்து காத்துள்ளது.

இருபக்கம் அடி
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போன்ற நிலையில் ஆளும் அதிமுக உள்ளது. எனவே இனி அரசியலில் பல அதிரடி திருப்பங்களை பார்க்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications