கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்த நகைகளை சேலம், ஆத்தூரில் விற்ற திருடர்கள்!
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சேலம், ஆத்தூரில் உள்ள நகைக் கடைகளில் கொள்ளையர்கள் அடகு வைத்ததாகவும், விற்று பணம் பெற்று கொண்டதாகவும் தெரிகிறது.
குன்னூர்: கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சேலம், ஆத்தூரில் உள்ள நகைக் கடைகளில் கொள்ளையர்கள் அடகு வைத்ததாகவும், விற்று விட்டதாகவும் தெரிகிறது.
கடந்த 24-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்த கொள்ளையர்கள், தங்களுக்கு இடையூறாக இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர். காவலாளி கிஷன் பகதூரிடம் பெற்ற தகவலை வைத்து கொள்ளையர்கள் குறித்து வரைப்படங்கள் தயாராகின.
கேரள மாநிலத்தவர்
இந்நிலையில் கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூர். வயநாடு உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக இந்த கொலையும், கொள்ளையும் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடரும் விபத்துகள்
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அதேபோல் மற்றொரு குற்றவாளியான சயான் பாலக்காட்டில் விபத்து ஏற்பட்டு கோவை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
நகை கொள்ளை
இதனிடையே, எஸ்டேட்டில் உள்ள 3000 சவரன் நகைகளும், விலை மதிப்பில்லாத கற்களும், 3 சூட்கேஸ்களில் இருந்த முக்கிய ஆவணங்களும், ஜெ. எழுதி வாத்த உயில்கள், சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடகு வைக்கப்பட்ட நகைகள்
இந்நிலையில் எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்ளையர்கள் சேலம், ஆத்தூரில் உள்ள நகைக் கடைகளில் விற்று விட்டதாகவும், சிலவற்றை அடகு வைத்துள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.கடந்த ஜனவரி மாதமும், சில ஆடம்பர நகைகளை சேலத்தில் விற்றதாக தெரியவந்து உள்ளது.இது குறித்து நகைக்கடை அதிபர்களுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு உள்ளனர்.போலீஸாரும் விசாரணை நடத்தவுள்ளனர்.