இஸ்லாமிய பெண்கள் “டார்கெட்”.. 3,042 சவரன் தங்கமா? மயிலாடுதுறையில் ரூ.12.5 கோடியில் “மெகா” மோசடி
மயிலாடுதுறை: இஸ்லாமிய பெண்களை குறிவைத்து 3,042 சவரன் தங்க நகையை நூதன முறையில் பெண் ஒருவர் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இழந்த நகைகளை மீட்டு தர கோரி 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது நாளாக இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி பாத்திமா நாச்சியா (வயது 45). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்க நகை பாதுகாப்பு என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இவர் சவரனுக்கு 1500 ரூபாய் தருவதாகவும் 15 நாட்களில் நகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனை அப்படியே நம்பிய சீர்காழி தாலுக்கா புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மஜிலாபானு என்பவர் 502 சவரன் தங்க நகையை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்து உள்ளார்.

நகை சேமிப்பு நிறுவனம்
இதனை அறிந்த மற்ற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களது நகைகளை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்து பணம் பெற்று இருக்கின்றனர். முதல் மூன்று மாதங்கள் பாத்திமா நாச்சியார் தான் கூறியபடி 15 நாட்களில் அவர்களிடம் நகைகளை திருப்பி கொடுத்து உள்ளார். இதனால் அவர் மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

இழுத்தடித்த நாச்சியார்
ஆனால், முதல் 3 மாதங்களுக்கு பின்னர் நகைகளை கொடுக்காமல் இழுத்து அடித்து உள்ளார் பாத்திமா நாச்சியார். இதனால் சந்தேகம் அடைந்த நகை கொடுத்த பெண்களை தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க நாச்சியாரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அவர் சமாளித்து வந்து இருக்கிறார்.

எஸ்கேப் ஆன பாத்திமா
மக்கள் தன் மீது சந்தேகப்படுவதை சுதாரித்துக் கொண்ட பாத்திமா நாச்சியார், மயிலாடுதுறையில் தான் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கும்பகோணத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளார். அன்று முதல் தங்களது நகைகளை கேட்டு பலமுறை அலைந்து திரிந்த 502 சவரன் நகையை கொடுத்த மஜிலாபானு நேற்று தனது நகையை மீட்டு தரக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்மன் அனுப்பி பாத்திமா நாச்சியாவை விசாரணைக்கு அழைத்தனர். பாத்திமா நாச்சியா சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் சீர்காழி காவல் நிலையத்தில் குவிந்து தங்களது நகைகளை மீட்டு தர வலியுறுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குவிந்த பெண்கள்
இதனை அடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நகையை இழந்த பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு வந்து தனித்தனியே மோசடி செய்த பெண் மீது புகார் மனு அளித்தனர். இதனை காவல்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன. அதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்றைய மதிப்பு படி 3,042 சவரன் நகை ரூ.12.5 கோடியை தொடுகிறது.












Click it and Unblock the Notifications