கள்ள ஓட்டுப் போட்ட அதிமுக பூத் ஏஜெண்டுக்கு ரூ 2000 அபராதம்: சங்ககிரி கோர்ட் உத்தரவு
நாமக்கல்: லோக்சபா தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க., பிரமுகருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து சங்ககிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டசபை தொகுதியிலுள்ள ஆலத்தூர் ரெட்டிபாளையம் வாக்குச் சாவடியில், அ.தி.மு.க., சார்பில் பூத் ஏஜண்டாக இருந்தவர் சந்திரவேல் (35).
ஆலத்தூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரவேல் அதே ஊரை சேர்ந்த தனசேகர் என்பவரின் ஓட்டை போட்டுள்ளார்.
இதுகுறித்து, வாக்குச் சாவடி கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், தேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்- 1ல், பூத் ஏஜென்ட் சந்திரவேல் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரமேஸ்வரி, ‘கள்ள ஓட்டு போட்ட சந்திரவேலுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்து' நேற்று தீர்ப்பளித்தார்.