அள்ள அள்ள தங்கம், வெள்ளி.. அரசு ஊழியர் லாக்கரில் ரெய்டு நடத்திய டீம் அதிர்ச்சி!
லஞ்ச பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் சிக்கியுள்ளது.
Recommended Video

கடலூர்: ரூபாய் 100, 200-க்கே மக்கள் திண்டாடிக் கொண்டும், கூலி வேலை பார்த்தும் வரும்போது, ஒரு அரசு ஊழியரிடம் 12 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர் பாபு. இவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாகன தகுதி சான்று வாங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பாபுவிடம் விசாரணை நடத்தினர்.

லாக்கரில் தங்கம்
25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது உண்மையா என போலீசார் விசாரணை நடத்த சென்றால், அங்கே கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல, ஏராளமான கணக்கிலடங்காத தங்க நகைகளை பாபு சேர்த்து வைத்திருந்த விவரம் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கடலூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பாபுவின் லாக்கர்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுமார் 12 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வங்கி லாக்கர் முடக்கம்
இதனால் போலீசார் விசாரணையை முன்னும் தீவிரப்படுத்தினர். அதனடிப்படையில், கடலூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருட்கள், கூடவே ரூபாய் 35 லட்சம் ரொக்கமும் இருந்தது. இது எல்லாவற்றையும் கைப்பற்றிய போலீசார், பாபுவின் வங்கி லாக்கரையும் முடக்கி வைத்துள்ளனர். இதுபோக பாபு, வேற எந்த வங்கியிலாவது அக்கவுண்ட், லாக்கர் வைத்திருக்கிறாரா என்றும் சோதனை மேற்கொள்ள உள்ளார்கள்.

நகைகள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு நகை, வங்கியில் உள்ள நகை எல்லாவற்றையும் நகை மதிப்பீட்டாளர்கள்களிடம் கொடுத்து சோதனை செய்து அதன்பிறகு அவற்றின் மதிப்பு கணக்கிடப்படும் என்று போலீசார் கூறுகிறார்கள். மதிப்பு கணக்கிடப்பட்ட பிறகு அந்த நகைகளை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாமே லஞ்சம் தான்
இப்படி கிலோ கணக்கில் பாபு சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் லஞ்சப்பணம் வாங்கியே அதன்மூலம் சேர்க்கப்பட்டது. இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்க ஒரு தனி வீட்டையே வாடகைக்கு பிடித்து, லஞ்ச பணத்தை எண்ணுவதற்காக சம்பளத்திற்கு ஆட்களையும் வைத்திருந்தார். இதுபோல் அரசு துறையில் லஞ்சம் பெறும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்!!












Click it and Unblock the Notifications