தமிழ் கலாசாரத்தில் ஈர்க்கப்பட்ட ரஷ்ய தம்பதி... மயிலாடுத்துறை கோவில்களில் சாமி தரிசனம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் 3 வயது குழந்தையுடன் ரஷ்ய தம்பதி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ‛‛தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் தமிழகம் வந்து தரிசனம் செய்கிறோம்'' என ரஷ்ய தம்பதி கூறினர்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. கோவில்களின் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலைகள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இதனால் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவில்களுக்கு வந்து தரிசனம் முடித்து பழங்கால கட்டிடக்கலையை பார்த்து ரசித்து செல்வது வாடிக்கையானதாக உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வராமல் இருந்தனர். தற்போது நோய் பரவல் குறைந்துள்ளதால் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் ரஷ்ய தம்பதி மயிலாடுத்துறைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் அலெக்ஸி. இவரது மனைவி மாயா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. இவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கோவில்களில் தரிசனம் மேற்கொண்டு, கோவில் கட்டடக்கலைகளை பார்த்து வுியப்படைந்து வருகின்றனர்.
இந்த தம்பதி தற்போது மயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் தரிசனம் செய்கின்றனர். ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட இந்த தம்பதி அதுபற்றிய விஷயங்களையும் கேட்டு அறிந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் அருகே நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ள பரணி நட்சத்திரத்திற்கு உரிய அக்னீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
இதுபற்றி அந்த தம்பதி கூறுகயைில், ‛‛ தமிழ் கலாச்சாரம் எங்களுக்கு பிடிக்கும். இதன்மூலம் ஈர்க்கப்பட்டதோடு, ஜோதிடத்தின் மீது நம்பிக்கையால் தமிழகம் வந்து தரிசனம் செய்கிறோம். திருநள்ளாறு திருநாகேஸ்வரம் சூரியனார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் முடித்து நாடு திரும்ப உள்ளோம்'' என்றார்.
கிராம கோயில்களில் தரிசனம் செய்ய செல்லும் அவர்களை உள்ளூர் பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்கின்றனர். இந்த தம்பதியுடன் சேர்ந்து பலர் செல்போனில் படம் எடுத்து கொள்கின்றனர்.