மூவர் தூக்கு ரத்து: நெல்லை, இடிந்தகரையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இடிந்தகரை; முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் மனித நேய ஆர்வலர்கள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லையில் மதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் உதயகுமார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதைப் போல மூன்று பேரின் விடுதலைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்டு கொடுத்த தொண்டர்கள்
முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்ட உடனேயே நெல்லையில் ம.தி.மு.க.வினர் நேற்று மதியம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு லட்டுக்களை வழங்கினர். மாவட்ட செயலாளர்கள் பெருமாள் சரவணன்,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
நிர்வாகிகள் வடிவேல் பாண்டியன்,பொன்.வெங்கடேஷ்,சுதர்சன்,ஆறுமுகம்,சுந்தரலிங்கம்,சுப்பையா,
மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜோசப்,டேனியல் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
உதயகுமார் மகிழ்ச்சி
முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை வரவேற்று இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு குழுவின் சார்பில் உதயக்குமார்தலைமையில் புஷ்பராயன்உள்ளிட்டோர் அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
விடுதலை கிடைக்குமா?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அனைவரும் மூன்று பேரின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதைப் போல அவர்களுக்கு விடுதலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு
மூவரின் தூக்கு ரத்து செய்யப்பட்டதற்கு இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழம் மலரும்
இரு நாட்டு தமிழர்களும் இணைந்து குரல் கொடுத்தால் இதே போல், விரைவில் தமிழ் ஈழம் மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.