கிரானைட் முறைகேடு- சகாயம் அறிக்கை தாக்கல் செய்ய நவ.23 வரை ஹைகோர்ட் அவகாசம்
சென்னை: கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 5 வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதியன்று கண்டிப்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட சகாயத்தின் அறிக்கையில் மலைகள், கண்மாய்கள் அழிப்பு, நரபலி குற்றச்சாட்டு, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதால், சகாயத்தின் அறிக்கை பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கிரானைட் கொள்ளை
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. உயர்நீதிம்ன்றத்தின் உத்தரவின்படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இதுகுறித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார் சகாயம்.
21 கட்ட ஆய்வு
11 மாதங்களில் 21 கட்டங்களாக ஆய்வு நடத்தினார் . பல்வேறு துறை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. உச்சகட்டமாக குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் அடிப்படையில் சின்னமலம்பட்டியில் தோண்டி, ஒரு சிறுமியின் எலும்புக்கூடு உள்பட மொத்தம் 9 எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி தனது விசாரணை முடிந்ததாக சகாயம் அறிவித்தார்.
அறிக்கை தயார்
அனைத்து ஆவணங்களும் கடந்த 9ம்தேதி சென்னை கொண்டு செல்லப்பட்டன. கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திட்டமிட்டபடி சகாயம் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.
ஒரு வாரம் அவகாசம் கேட்ட சகாயம்
ஆவணங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாததால் மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் சார்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
டிராபிக் ராமசாமி எதிர்ப்பு
அப்போது டிராஃபிக் ராமசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் நாளை இறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
5 வாரம் அவகாசம்
இதனையடுத்து நீதிபதிகள், சகாயத்திற்கு வரும் 5 வார காலம் ( நவம்பர் 23ம் தேதி வரை) அவகாசம் வழங்கியதுடன், இதற்கு அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை முன்னதாக தயாரானால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்ததுடன் வழக்கை நவம்பர்23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மனுதாக்கல் செய்த டிராபிக் ராமசாமி
கடந்தாண்டு நவம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சகாயம், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையை மேற்கொண்டார்.
இழப்பீடு எவ்வளவு
கிரானைட் முறைகேடு அறிக்கையில் என்பது நிறுவனங்களால் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்பு மட்டுமில்லாமல், வேளாண்துறைக்கு என்னமாறியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பொதுமக்களுக்கு என்னமாறியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு என்னமாறியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவான ஒரு அறிக்கையாக இருக்கும் என்று தெரிகிறது.
பீதியில் அதிகாரிகள்
நரபலி, கண்மாய், குளங்கள் அழிப்பு, மலைகள் சிதைப்பு உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் சகாயம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்த பின்பு, கிரானைட் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்வதா, அல்லது அரசிடம் ஒப்படைத்து அரசு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடுவதா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும். சகாயம் தாக்கல் செய்ய உள்ள அறிக்கை பெரும் புயலை கிளப்பும் என்பதால் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.