வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த ஊருக்குள் நுழைய கடும் எதிர்ப்பு... 'ஷாக்'குடன் திரும்பினார் சரத்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் சரத்குமார் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த ஊருக்கு சென்ற போது அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் சென்ற வழியே திரும்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் சமக தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார். திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆறுமுகநேரியில் அவர் பிரச்சாரம்b மேற்கொண்டார். அதன் பிறகு அதன் அருகே உள்ள மூலக்கரைக்கு சென்றார். இது வெங்கடேச பண்ணையாரின் சொந்த ஊர் ஆகும். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.
இந்த திருவிழாவில் சென்னையில் முக்கிய தொழில் நடந்தி வரும் பல முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர், அவர்களை சந்தித்து தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக நள்ளிரவு 11.30 மணிக்கு சரத்குமார் மூலக்கரைக்கு சென்றார்.
வெங்கடேஷ் பண்ணையார் அதிமுக ஆட்சியில்தான் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதனால் மூலக்கரையில் உள்ள வெங்கடேச பண்ணையாரின் உறவினர்களும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக ஆட்சியின் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சரத்குமார் ஊருக்குள் நுழைய மூலக்கரை கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு அவர் கோயி்ல் திருவிழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களை மட்டும் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த இளைஞர்கள் கோயில் திருவிழாவில் அனைத்து தப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். அதிமுகவுடன் கூட்டணியில் நீங்கள் இருப்பதால் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்பாராத சரத்குமார் அதிர்ச்சியில் உறைந்தார்.
இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் நீங்கள் இந்தப் பகுதியில் நுழையக்கூடாது என்றும் அவர்கள் கூக்குரலிட்டனர். இதனால் சரத்குமார் அந்தப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறினார்.