10 ரூபாயாவது டீசல் விலையக் குறைங்களேன் .. சரத்குமார் கோரிக்கை
சென்னை: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டீசல் விலையை குறைந்த பட்சம் லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவிலாவது குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு டீசல் எண்ணெய் விலையும் ரூ. 2.50 வரை குறைக்கப் படும் என எண்ணெய் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 அளவிலாவது குறைக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
உலகச் சந்தையில்...
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 89 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது.
விலை நிர்ணயம்...
அதிக பட்சமாக ஒரு பேரல் 2008-ல் 140 டாலராகவும் அதன் பின்பு கச்சா எண்ணெய் விலை 107 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலையோடு ஒப்பிட்டால்...
4 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லிட்டர் டீசல் 45 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. தற்சமயம் சுமார் 63 ரூபாய் அளவு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையை ஒப்பிட்டு டீசல் விலையை நிர்ணயம் செய்தால் இப்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 50-க்கும் குறைவாக விற்கப்பட வேண்டும்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு...
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், பண வீக்கத்தைக் குறைக்கும் விதமாகவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் கணிசமாக குறைக்க வேண்டும்.
லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும்...
குறிப்பாக டீசல் விலையை வழக்கம் போல் சிறிய அளவில் குறைக்காமல் குறைந்தபட்சம் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிற்காவது குறைப்பதே நியாயமாக இருக்கும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.