நெல்லை, குமரி, தூத்துக்குடியை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: சமக தீர்மானம்
சேலம்: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களையும், பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற சேலம் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் எடப்பாடி வைத்திலிங்கம் மஹாலில் நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு உரையாற்றினார்.
எடப்பாடி தொகுதி செயலாளர் செங்கோடன் தலைமை வகிக்க, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.மைக்கேல் தங்கராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வு சீரமைப்பு பெற, தமிழக முதலவர் விடுத்த கோரிக்கையை முழுமையாக மத்திய அரசு ஏற்று நிவாரண நிதியை வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களையும் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.