அதிமுகவுக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம்: ச.ம.கவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக, இம்மாதம் 26-ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இந்த நிலையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற சமகவில் கூடுதல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
'நடைபெற இருக்கும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகளில் ஈடுபடவும், பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களை தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ நியமனம் செய்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், வருகிற 26 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள். பிரச்சார பயண விபரம் விரைவில் வெளியிடப்படும்' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
கூடுதல் தேர்தல் பணி பொறுப்பாளர்கள்
இதனிடையே சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக தஞ்சை தொகுதிக்கு பேராவூரணி ராஜா, சிவகங்கை மற்றும் திருச்சி புதுக்கோட்டை சாதிக், திருச்சி தொகுதிக்கு பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஏ.பி.மஹேஸ்வரா, நெல்லை தொகுதிக்கு அம்பை தொகுதிச் செயலாளர் செங்குளம் கணேசன், வடசென்னை தொகுதிக்கு வழக்கறிஞர் டி.விநாயகமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பம்மல் ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.