ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவை ஒதுக்கி வைக்காது- சசி தம்பி திவாகரன்
அதிமுகவின் இணைப்பை எல்லா எம்.எல்.ஏக்களும் ஏற்றுக்கொண்டார்களா சசிகலாவின் தம்பி திவாகரன் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது மகிழ்ச்சி தான். ஆனால், அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒத்துக்கொண்டுதான் இந்த இணைப்பு நடந்ததா? என சசிகலாவின் தம்பி திவாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்ட போரட்டத்திற்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன. இந்த இணைப்பு பற்றி தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திவாகரன், அதிமுகவின் பிளவுபட்ட இரு அணிகளும் இணைவதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த இணைப்பை அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொண்டார்களா?
எடப்பாடி பழனிச்சாமி தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள இந்த இணைப்பை சாதகமாக்கியுள்ளார். அதேபோல், ஒபிஎஸ்ஸும் தன்னுடைய நிலையைக் காப்பற்றிக்கொள்ள செய்த சமரசம் தான் இது. சசிகலாதான் ராஜினாமாவிற்கு நிர்பந்தம் செய்ததாக ஓபிஎஸ் கூறினார். அதை யாராவது கேட்டார்களா?
மேலும், சிலர் கொடுத்த அழுத்தத்தால் இந்த இணைப்பு நடந்துள்ளது. ஆனால், இன்னும் என்னிடம் தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் இந்த இணைப்பை விரும்பவில்லை. அதற்கான எதிர்ப்பை என்னிடம் தெரிவித்துள்ளனர்.
எனக்கு இன்னும் சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துக்கொண்டுதான் உள்ளனர். தினகரனிடம் 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என கூறினார்.
சசிகலாவை யாராலும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடியாது. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் சசிகலாவை ஒதுக்கி வைக்க சொல்லாது.