நடராசன் பேச்சை பார்த்தால் ஆர்.கே.நகரில் சசிகலாதான் அதிமுக வேட்பாளர் போலயே?
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சசிகலாவே போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை அவரது கணவர் நடராசனின் பேட்டி வெளிப்படுத்துவதாக தெரிகிறது.
உடல்நலக் குறைவால் காலமான ஜெயலலிதா சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராசன், அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது; திருட முடியாது என அக்கட்சிக்கு உரிமை கோரும் தொனியில் பேசினார்.
ஏற்கனவே அதிமுகவை சசிகலாதான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நாடறிந்த உண்மை. ஆனால் முதல்வர் பொறுப்பு ஓபிஎஸ் கையில் இருக்கிறது. ஆட்சியையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைத்தான் சசிகலா தரப்பு விரும்புகிறது. இதையே நடராசனின் பேட்டியும் சொல்லாமல் சொல்கிறது.
ஆர்கே நகர் தொகுதி காலி
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவால் அவரது ஆர்.கே. தொகுதி காலியாக உள்ளது. இத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கட்சிதான் முதலில்...
அதிமுக மீது மக்களுக்கு தற்போது அனுதாபம் இருக்கிறது. இந்த அனுதாபத்தை சிதைக்கும் வகையில் உடனடியாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டா என சசிகலா நினைக்கிறார். முதலில் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் தக்க வைக்கும் நடவடிக்கைகளை உறுதி செய்வதிலேயே அவர்கள் தரப்பு முனைப்பாக இருக்கிறது.
அடுத்த டார்கெட் ஆட்சி...
அதே நேரத்தில் கட்சியை முழுமையாக கொண்டு வந்து மெல்ல ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவதுதான் சசிகலா தரப்பின் இலக்கு. இதனால் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய நெருக்கடி சசிகலாவுக்கு உண்டு.
கட்சி, ஆட்சியை தக்க வைக்க...
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றால்தான் கட்சி, ஆட்சி இரண்டையும் தங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தே அடுத்த கட்ட நகர்வுகளை சைலண்ட்டாக மேற்கொள்ள் திட்டமிட்டுள்ளது சசிகலா தரப்பு.
தஞ்சாவூர் நிலவரம்
ஏற்கனவே தஞ்சாவூர் தொகுதி மறுதேர்தலில் சசிகலா போட்டியிடக் கூடும் எனக் கூறப்பட்டது. அதற்கான முயற்சிகளை நடராசன் மேற்கொண்ட போதும் அது பலனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.