இன்று பேச்சுவார்த்தை.. சசிகலா- தினகரனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி கோஷ்டி கிரீன் சிக்னல்?
இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வருவதை பார்த்தால் சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு என்ற ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை எடப்பாடி அணியினர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
சென்னை: அதிமுக இணைவு குறித்து பேச்சுவார்த்தை நாளை நடப்பதாக உள்ள தகவல்களை பார்த்தால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி அணியினர் இசைவு தெரிவித்துவிட்டது போல் தோன்றுகிறது.
அதிமுக இணைவு என்று பேச்சு வந்ததிலிருந்து அன்றாடம் தமிழக மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது. இரு அணிகளும் தினம் வெளியிடும் கோமாளித்தனமான கருத்துகளால் எதிர்க்கட்சியினர் கைகொட்டி சிரித்தனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை இப்போ, அப்போ என்று தள்ளி போய் கொண்டே இருந்தது. நாள் சரியில்லை, நட்சத்திரம் சரியில்லை என்றும், ஓபிஎஸ்ஸின் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளால் எடப்பாடி அணி வாயடைத்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.
கருத்து மோதல்
ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனைகளின்படி, சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதை தமது தர்மயுத்தத்திற்கு கிடைத்ததாக முதல் வெற்றி என்று ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, 6 முக்கிய அமைச்சர்கள் பதவி ஆகியவற்றை ஓபிஎஸ் அணியினர் டிமான்ட் வைப்பதாக தெரிவித்தார். அதே வேளையில் எடப்பாடியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, எடப்பாடியே முதல்வராக நீடிப்பார் என்று தெரிவித்தார்.
டிரம்ப் வெற்றிக்கே ஓபிஎஸ்தான் காரணம்
ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் ஜெயகுமார், தர்மயுத்தத்திற்கான வெற்றி என்று ஓபிஎஸ் கூறியது அவரது சொந்த கருத்து. ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பின் வெற்றிக்குதான் தான் காரணம் என்றும் ஓபிஎஸ் கூறினாலும் கூறுவார் என்றார். இந்த கருத்துக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மூன்றாம் தர அரசியல்வாதி
அப்போது முனுசாமி பேசுகையில் முதல்வர் பதவியை நாங்கள் கேட்காமலேயே மூன்றாம் தர அரசியல்வாதி போல் அந்த அணியை சேர்ந்த அமைச்சர்கள், தம்பிதுரை ஆகியோர் கருத்து தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டார். சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றுவிட்டு பின்னர் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், சசிகலா குடும்பத்தினர் 30 பேரையும் நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அதிமுக இணைவு ஏற்படுமா என்ற கேள்விகள் எழும்பின.
அடக்கிவாசித்த எடப்பாடி கோஷ்டி
இதனால் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவிக்கையில், அமைச்சர் ஜெயகுமார் பேசியதை மறந்து விடுங்கள். இரட்டை இலைக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் நாம் இணைய வேண்டும் என்று அடக்கிவாசித்தார். இந்நிலையில் சனி, ஞாயிற்று அன்று பேச்சுவார்த்தை நடக்கும் என்றிருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி டெல்லி சென்றுவிட்டதால் நாளை (திங்கள்கிழமை) இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
எங்கு பேச்சுவார்த்தை
அதிமுக அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அதிமுக புரட்சித் தலைவி அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. முதலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ரகசிய இடத்தில் கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கண்ட 14 பேர் மட்டுமே கலந்து கொள்வர். அப்போது முதல்வர், பொதுச் செயலாளர் பதவி குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோல் ஓபிஎஸ் அணியினரின் முக்கிய நிபந்தனையான சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கும் இந்த கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது. சுமுக முடிவுகள் எட்டப்பட 2 அல்லது 3 நாள்கள் ஆகும் என்பதால் அதுவரை அமைச்சர்களோ மூத்த நிர்வாகிகளோ எவ்வித கருத்துகளையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.