குக்கர் சின்னம்.. குஷியில் தினகரன்... கடும் கொந்தளிப்பில் சசிகலா சொந்தங்கள்
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கொடுத்ததை ரசிக்கவில்லையாம் சசிகலா சொந்தங்கள்.
Recommended Video

சென்னை: குக்கர் சின்னம் கிடைத்த குஷியில் இருக்கிறார் தினகரன். ஆனால் அதிமுகவில் தங்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதே என கொந்தளிக்கின்றன சசிகலா சொந்தங்கள்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக, தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்தார் தினகரன். இந்த முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சி தொடங்குவது அவருடைய சொந்த முடிவு. அதில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நாங்கள் அ.தி.மு.கவில் இருக்கிறோம். தினகரனின் தனிக்கட்சியிலும் சேர மாட்டோம்' எனப் பகிரங்கமாகப் பேட்டியளித்தார் தங்க.தமிழ்ச்செல்வன். அ.தி.மு.கவில் போட்டியிட்டு வென்றவர்கள், தனிக்கட்சியில் சேர்ந்துவிட்டால் சட்டரீதியாகவே எடப்பாடி அணி பலம் பெறும் என்பதால் தினகரன் ஆதரவில் இயங்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தயங்கினார்கள்.

தினகரனுக்கு சசிகலா எதிர்ப்பு
இதைப் பற்றி சசிகலா கவனத்துக்கு நீண்ட கடிதம் எழுதினர். இதையடுத்து, கடந்த 19-ம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினார் தினகரன். அப்போதும், ' தேர்தல் என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. அப்படியிருந்தால், தனிக்கட்சி தொடங்குவதைப் பற்றி யோசிக்கலாம். இப்படியொரு முயற்சி தேவையில்லை. டெல்லி ஐகோர்ட்டில் மூன்று கட்சிப் பெயர்களைக் கொடுத்தது ஏன்?' என விளக்கம் கேட்டார்.

சசிகலாவிடம் பொய் சொன்ன தினகரன்
இதனை எதிர்பார்க்காத தினகரன், ' நம்மிடம் உள்ளவர்களுக்குப் பதவி கொடுத்து, தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும். சுயேச்சையாகப் போட்டியிட்டால், யூனிபார்ம் சிம்பள் கொடுக்க மாட்டார்கள். டெல்லி ஐகோர்ட்டில் இருந்து அவசரமாகக் கேட்டதால், நம்ம வக்கீல்கள் இந்தப் பெயர்களைச் சொல்லிவிட்டார்கள்' என மழுப்பியிருக்கிறார்.

சசிகலாவுக்கு சிகிச்சை
உடனே சசிகலாவும், ' சரிப்பா..நான் சொல்ற வரைக்கும் எதையும் பண்ணாதே' எனக் கூறிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகும், தினகரனின் தனிக்கட்சி ஆவர்த்தனம் பற்றிய செய்திகள் சசிகலாவின் கவனத்துக்குச் சென்றன. ஏற்கெனவே, சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்தித்து வந்தவர், குடும்ப மோதல்களும் கட்சி குளறுபடிகளும் ஒன்றுசேர்ந்து உடல்நலக் குறைவை ஏற்படுத்திவிட்டது. சிறையில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார் சசிகலா.

சசிகலாவிடம் கம்பீரம் இல்லை
இதைப் பற்றி விவரிக்கும் அவரது உறவினர்கள், " கடந்த ஓரிரு வாரங்களாகவே மனதளவில் மிகவும் சோர்ந்துவிட்டார் சசிகலா. கார்டனில் இருக்கும் வரையில் தோற்றத்தில் ஒரு கம்பீரத்தைக் காட்டிக் கொண்டே இருப்பார். இப்போது வலுக்கட்டாயமாக கம்பீரத்தை வெளிக்காட்டுகிறார். செயற்கையாக தன்னைக் காட்டிக் கொள்ள முற்படுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வளவு நாள் சிகிச்சை எடுத்தபோது, எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அன்று பரிசோதனைக்காக சிறை மருத்துவமனைக்குள் சென்ற தகவல், வெளியே கசிந்துவிட்டது.

அச்சத்தில் சசிகலா
இளவரசியும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார். எப்போது வெளியே விடுவார்கள் என ஆதங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பேரக் குழந்தைகளை அடிக்கடி பார்ப்பது ஒன்றுதான் அவருக்கான ஆறுதலாக இருக்கிறது. சுதாகரனும் மனதளவில் நொடிந்து போய் இருக்கிறார். ' இப்படியே போனால், மனநோய்க்கு ஆளாக வேண்டியது வரும்' என சிறை மருத்துவர்கள் எச்சரிக்கவே, அவருடைய மனைவி வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். தனிக்கட்சி முடிவால், அ.தி.மு.கவில் இருக்கும் சிறிதளவு பிடிமானமும் விலகிவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் சசிகலா" என்றார் விரிவாக.

தினகரன் தரப்பு எதிர்பார்த்த தீர்ப்பு
தினகரனுக்கு மீண்டும் குக்கர் சின்னம் கிடைத்தது குறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர் ஒருவர், " சட்டரீதியாகவே இந்த விவகாரத்தில் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்பினோம். காரணம், என்.டி.ஆர் மறைவுக்குப் பிறகு லட்சுமி சிவபார்வதிக்கு தனிக்கட்சி பெயர் கிடைத்தது. அப்படியிருக்கும், 2 எம்.பிக்கள், 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களைக் கையில் வைத்திருக்கும் தினகரனுக்கு தனிச்சின்னம் கிடைப்பது இயல்பானது. அ.தி.மு.க அம்மா அல்லது புரட்சித் தலைவி அம்மா என இரண்டு பெயர்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கேட்க இருக்கிறோம். 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிராக, அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கிலும் எங்கள் அணிக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும். சின்னம்மாவின் ஆசியோடுதான் தனிக்கட்சி பெயரை அறிவிப்பார் தினகரன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications