அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவர் ஆதரவும் எங்களுக்கே.. இரட்டை இலை வழக்கில் முதல்வர் தரப்பு வாதம்
சென்னை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் முன்வைத்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
டி.டி.வி. தினகரன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா, சேதுராமன் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "அதிமுகவில் தற்போது பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகளை களைந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இணைந்து விட்டனர். மேலும் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது எங்களுக்கு தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இருவரும் கிரிமினல் வழக்கு பின்னணி உடையவர்கள் என்பதாலும் சசிகலா கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் 4 ஆண்டு தண்டனை அனுபவிக்கிறார் என்பதாலும் அவர்களுக்கு இரட்டை இலையை கொடுக்க கூடாது.
முதல்வர் தரப்பில் வாதிடுகையில், 42 எம்பிக்கள், 116 எம்எல்ஏக்கள், 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும், 6 எம்பிக்களும் தினகரன் பக்கம் உள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்களை ஏற்றுகொள்ளக் கூடாது. ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்களில் 95% எங்கள் பக்கமே உள்ளனர்.
குடும்ப ஆட்சியை கட்சியில் கொண்டுவர சசிகலா முயற்சி செய்கிறார். சிறைக்கு போனபோது வேறு வழியின்றி, தினகரனை பொதுச்செயலராக்கினார் சசிகலா. இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.