கூவத்தூரில் குழந்தைக்கு ஜெயலலிதா பெயரை சூட்டிய சசிகலா
கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் தங்கியுள்ள சசிகலா, நேற்று ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார். அரசியல்வாதி போல குடிசை வீட்டுக்குள் சென்று குறைகளை கேட்டார் சசிகலா.
சென்னை: தமிழக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலா, நேற்று போயஸ்கார்டனில் இருந்து கிளம்பிய போது வழியெங்கும் ஆங்காங்கே நிறுத்தி மாணவர்கள் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்தார். கூவத்தூரில் அதிருப்தியில் உள்ள மக்களை சமாதானப்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா பெயரை சூட்டினார்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக கடந்த 27 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்றினார் சசிகலா. இதையடுத்து ஆட்சியையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்களையும் கடத்தி கூவத்தூரில் அடைத்து வைத்துள்ளார்.
கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சசிகலா தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 2 நாட்களாக ஏற்கனவே சந்தித்து தம்மை ஆதரிக்கும்படியும், கேட்டுக்கொண்ட சசிகலா மூன்றாவது நாளாக ரிசார்ட்டுக்கு சென்றார்.
மாணவர்களுக்கு சாக்லேட்
திருவான்மியூர் அருகே கார் சென்ற போது மாணவர்கள், வயதானவர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் அருகே காரை நிறுத்தி பேசினார் சசிகலா, குழந்தைகளுக்கு சக்லேட் வழங்கினார். பாட்டிகளிடம் பேசினார் சசிகலா.
குடிசைக்குள் குறை கேட்ட சசிகலா
கூவத்தூருக்கு சென்ற சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாணியில் அந்தப் பகுதியில் உள்ள குடிசைக்குள் புகுந்து ஒரு பாட்டியை கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் சசிகலா.
ஜெயலலிதா பெயர் சூட்டினார்
கூவத்தூர் பேட்டை பகுதியில் விநாயகம் - புனிதா தம்பதியரின் குழந்தைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சூட்டினார். ஜெயலலிதா பாணியில் முத்தம் கொடுத்தார். மக்களை சமாதானப்படுத்த சற்று அதிகமாகவே மெனக்கெட்டார் சசிகலா.
கூவத்தூரில் சமாதானம்
எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி ரவுடிகள் பலரும் கெடுபிடி செய்வதாக குற்றம் சாட்டினர் கிராம மக்கள் உடனே வெளியேறுங்கள் என்று போராட்டம் நடத்தினர். சசிகலா வந்து செல்வதால் போலீஸ் கெடுபிடியும் அதிகரித்தது எனவே பொதுமக்களின் அதிருப்தியும் அதிகரித்தது. எனவே எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த சென்ற சசிகலா, கூவத்தூர் பகுதி மக்களையும் சாமாதானப்படும் வகையில் சில ஸ்டண்ட்களை செய்தார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.