அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் முடிந்தது... நெக்ஸ்ட் டூர்தான் - சசிகலா முடிவு
அதிமுக நிர்வாகிகளுடன் சென்னையில் சசிகலா 5 நாட்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. இனி மாவட்ட வாரியாக சுற்று பயணம் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தொண்டர்களால் அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சசிகலா.
நிர்வாகிகள் கூடி அவரை பொதுச்செயலாளர் என்று அறிவித்தாலும், அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனையடுத்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த 4ஆம் தேதி முதல் ஆலோசனையை நடத்தினார் சசிகலா. கடந்த 5ஆம்தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 30வது நினைவஞ்சலி நடந்ததால் அன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடக்கவில்லை. திங்கட்கிழமையான நேற்று திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
வரவேற்பு ஜோர்
சசிகலாவை தினசரியும் வரவேற்க கூட்டத்தை அழைத்து வரவேண்டியது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பொறுப்பு. நேற்று சாலையில் இருபக்கத்திலும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கடந்த சில நாட்களை காட்டிலும் நேற்று மகளிர் அணி தொண்டர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சின்னக் குழந்தைகள் கூட கையில் அதிமுக கொடியுடன் காத்திருந்தனர்.
நிர்வாகிகளுடன் பேச்சு
ஆலோசனைக்கூட்டத்தில் எழுதி வைத்துக்கொண்டு சில விசயங்களை பேசிய சசிகலா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடுவது தொடர்பான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும். பகுதி செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து செயல்வீரர்களை அரவணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கரையான் புக வழி விடக்கூடாது
ஏழை மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் நானே பங்கேற்பேன். தொண்டர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சிக்குள் கரையான் புகுந்துவிட வழி ஏற்படுத்திவிடக் கூடாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறினாராம்.
குறைகளை கூறுங்கள்
ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்துங்கள். ஒற்றுமையுடன் செயல்படுவோம். அம்மா சொன்னது போல் நாளை நமதே. தொண்டர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடுங்கள். அவர்களின் குறைகளை என்னிடம் தெரிவியுங்கள். அம்மா தான் நமக்கு நிரந்தரம். அவரது வழியிலேயே அ.தி.மு.க. செயல்படும் என்று கூறினாராம் சசிகலா. ஆலோசனைக்கூட்டம் முடிந்த உடன் நிர்வாகிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் சசிகலா.
உயிர்நீத்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி
ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி உயிர்நீத்த 175 தொண்டர்களளின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார் சசிகலா. காலில் விழுந்து அழுத தொண்டர்களை ஆறுதல்படுத்தினார்.
சுற்றுப்பயணம்
ஆலோசனைக்கூட்டம் நேற்றுடன் முடிந்தது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் சசிகலா ஆலோசனை செய்து முடித்துள்ளார். அடுத்தக்கட்டமாக சசிகலா மாவட்ட வாரியாக சென்று அங்குள்ள நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகளை சமாளித்த சசிகலா, தொண்டர்களின் மனதில் இடம் பிடிப்பாரா? பார்க்கலாம்.