பரோல் காலம் முடிந்தது.. பெங்களூர் சிறைக்கு திரும்பினார் சசிகலா
மருத்துவமனையில் உள்ள கணவரை கவனித்துக் கொள்வதற்காக சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலாவின் பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்து இன்று பெங்களூர் சிறைக்கு திரும்புகிறார்.
Recommended Video
சென்னை: தனியார் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்க்க வழங்கப்பட்ட பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற சசி, சிறைக்குள் சென்றுவிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இந்நிலையில் அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலை மோசம்
அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து அவரது நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர்.
5 நாள்களுக்கு பரோல்
இதையடுத்து அவருக்கு கடந்த 4-ஆம் தேதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா கடந்த 6-ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார். அவருக்கு 5 நாள்களுக்கு பரோல் கொடுக்கப்பட்டது.
இன்று சிறைக்கு புறப்பட்டார்
இந்நிலையில் சசிகலாவின் பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பரோல் விதிகளின் படி இன்று மாலை 6 மணிக்குள் அவர் சிறையில் இருக்க வேண்டும். இதனால் அவர் சென்னையில் கிருஷ்ணப்பிரியா வீட்டிலிருந்து கார் மூலம் பெங்களூர் புறப்பட்டார்.
பூக்களை தூவி வழியனுப்பினர்
தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்ட சசிகலாவை வழியனுப்ப அதிமுக நிர்வாகிகள் தி. நகரில் குவிந்தனர். சிறைக்கு போகும் சசிகலாவிற்கு பூக்களை தூவி வழியனுப்பி வைத்தனர். பிறகு மாலை 4.30 மணிக்கு பெங்களூர் சிறைக்கு சென்றார் சசிகலா. சிறை வாயிலிலும் தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது.