ஜெ. சிகிச்சை வீடியோவை நான் வெளியிடுவதா, முடியாது.. தங்க தமிழ்செல்வனிடம் உருகிய சசிகலா!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டால் அது தனக்கும் அவருக்கும் இடையிலான நட்புக்கு ஏற்படும் களங்கமாகும் என்று சசிகலா கவலைப்பட்டதாக தங்கதமிழ் செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார்.
தேனி: அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டால் இருவருக்கும் இடையேயான நட்புக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று சசிகலா தன்னிடம் கூறியதாக ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், ஒரு மாநில முதல்வர் சிகிச்சை பெற்ற புகைப்படத்தையாவது வெளியிட்டிருக்கலாம் என அனைவரும் கேட்க ஆரம்பித்தனர். மேலும் சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது.
நட்பு என்னாவது
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டால் அது தங்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்புக்கு களங்கம் ஏற்படுவது போன்றது என்று சசிகலா தெரிவித்ததாக தங்க தமிழ் செல்வன் கூறினார்.
சசிகலாவுடன் சந்திப்பு
இதுகுறித்து தேனி மாவட்டத்தில் கோடாங்கிப்பட்டியில் அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கதமிழ் செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் சசிகலாவை பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சந்தித்து பேசினேன்.
நட்புக்கு பங்கம்
அப்போது ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்புக்கு பங்கம் ஏற்படும் என்று சசிகலா என்னிடம் கூறினார் என்றார்.
முன்பு கூறினார்களே
ஆனால் தேவைப்பட்டால் ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவோம் என்று சசிகலா தரப்பு கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ குறித்து பல்வேறு செய்திகளும் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.