அதிமுக உடையாமல் இருக்க சசிகலா புது ஃபார்முலா.. சீனியர் தலைவர்களுக்கும் ஓ.கே!
அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் தன்னை பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னிருத்த தேவையான ஆயத்த பணிகளை சசிகலா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு ஏற்படாமல் இருக்க அனைத்து முக்கிய ஜாதி பிரிவு முன்னணி தலைவர்களுக்கும், முக்கிய பதவிகளை கொடுக்க சசிகலா ஃபார்முலா வகுத்துள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தானே வகிக்க வேண்டும் என்பது அவரின் தோழி சசிகலா நடராஜனின் எண்ணமாம்.
அதேநேரம், பொதுச்செயலாளர் பதவிக்கு, வேறு சில சீனியர்களும் போட்டிக்கு வருவதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சசி கலா இறங்கியுள்ளார்.
கட்சிக்கு ஆபத்து
சீனியர்களை சமாதானப்படுத்தாவிட்டால், கட்சியை பிளவுபடுத்தி திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவோ அல்லது ஆட்சியை கலைக்கவோ அவர்கள் முயல்வார்கள் என்பது சசிகலா பயத்திற்கு காரணம். எனவே அதிமுகவில் அதிக எம்எல்ஏக்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களோ அந்த ஜாதி பிரிவில் சீனியர்களை சமாதானப்படுத்தும் வகையில் பதவி கொடுத்துவிடலாம் என்பது சசிகலா மூவ்.
ஜாதி கணக்கு
அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதில் பெரும்பான்மை ஜாதிக்காரர்கள் முக்குலத்தோர், கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் வன்னியர். எனவே இந்த ஜாதிகளை சேர்ந்தோரே அதிக அளவில் எம்எல்ஏக்களாகவும் உள்ளனர். இந்த ஜாதியை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களை சரிகட்ட சசிகலா நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்.
செங்கோட்டையன்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காக லாபி செய்யும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொங்குவேளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர். அவரது தலைமையில் அந்த ஜாதி எம்எல்ஏக்கள் அணி திரளக்கூடாது என்பதற்காக, அவருக்கு கட்சியின் பொருளாளர் பதவியை கொடுக்க சசிகலா முடிவு செய்துள்ளாராம்.
வன்னியர் ஜாதி
அதேபோல வன்னியர் ஜாதியை சேர்ந்த முக்கிய பிரமுகர், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, அதிமுக கட்சியின், அவைத்தலைவர் பதவியை கொடுக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராக ஓ.பி.எஸ் தொடருவார் என்பதாலும், தான் பொதுச்செயலாளர் என்பதாலும், முக்குலத்தோருக்கும் மகிழ்ச்சியே என்பது அவரது கணக்கு.
எல்லோரும் ஹேப்பி
ஒவ்வொரு ஜாதியிலும் முன்னணி தலைவர்களுக்கு பதவி கொடுத்தாலும், அந்த ஜாதியின் வேறு சீனியர்கள் பிரச்சினை செய்தால் அதற்காக துணை, இணை போன்ற பெயர்களில் முக்கிய பதவிகளை கொடுக்கவும் ஆயத்தமாகிவிட்டார் சசிகலா. ஏனெனில் இப்போதைக்கு அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு, கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால் பிறகு யாரும் பிரச்சினை செய்ய முடியாது என்பது சசிகலாவுக்கும் நன்கு தெரியும். சசிகலாவின் இந்த யோசனைக்கு, பண்ருட்டி ராமச்சந்திரனும், செங்கோட்டையனும் ஓ.கே சொல்லிவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன.