ஓவர்லோடு ஆட்டோவால் விபரீதம்.. பள்ளிச் சிறுமி பலி.. 15 குழந்தைகள் படுகாயம்
நெல்லை: நெல்லையில் தடையை மீறி அதிக அளவில் பள்ளிச் சிறார்களை அழைத்துச் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் ஒரு சிறுமி பலியானாள். 15 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள்.
இவர்களை மணிகண்டன் என்ற ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் தினசரி பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அதிக அளவில் அவர் பள்ளிப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்வாரா்ம். இன்றும் 16 குழந்தைகளுடன் ஆட்டோ போயுள்ளது.
அப்போது நான்கு வழிச் சாலையில், ஆட்டோ வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஜேசிபியில் மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
அந்த இடத்தில் அப்போது ஆள் நடமாட்டமே இல்லை. இதனால் உதவிக்கு யாரும் ஓடி வர இயலாத நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் ஆட்டோவைப் பார்த்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து மீட்புப் பணியில் குதித்னர்.
இருப்பினும் ஆட்டோவுக்குள் சிக்கிய சசிகலா என்ற 5ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். 15 குழந்தைகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.