கடுமையாக உழைத்தால் ஒலிம்பிக்கில் அசத்த முடியும், பதக்கத்தையும் அள்ள முடியும்.. மாணவர்களுக்கு அறிவுரை
தேவகோட்டை: கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வெல்ல முடியும் என்று தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுத் துறை விழிப்புணர்வு கூட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தர் அறிவுரை கூறினார்.
நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தர் மாணவர்களிடையே பேசுகையில், விளையாட்டு துறையால் வசப்படும் வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், மொத்தமுள்ள மக்கள் தொகையில் 1.9 சதம் அரசு பணியில் உள்ளனர். அதில் 0.6 சதம் அரசு ஊழியர்கள் விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். கடுமையாக உடல் உழைப்பு கொடுத்தால் மட்டுமே விளையாட்டு துறையில் வெற்றி இலக்கை அடையலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற முறையே தொடர்ந்து தினசரி ஒரு மணி நேரமும், இரண்டரை மணி நேரமும், நான்கு மணி நேரமும் விளையாட வேண்டும்.
200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற ஒரு வாரம் முழுவதும் 40 கிலோமீட்டர் தொடர்ந்து ஓடி பழக வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தால் அரசு இலவசமாக விளையாட்டு பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறது. அதில் சேர்ந்து விட்டால் நமக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். அரசின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு என தனி வேலை வாய்ப்பு உள்ளது.
தடகளம் - தடை தாண்டி ஓடுதல்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஹாக்கி, கைப் பந்து, டென்னிஸ், கால்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் என பல்வேறு வகையான விளையட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
விளையாட்டு துறையின் மூலம் வேலை கிடைத்தால் நமக்கு வருமானம் கிடைப்பதுடன் நல்ல புகழும் கிடைக்கும். கடுமையான பயிற்சியினால் மட்டுமே ஒலிம்பிக் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
தனலெட்சுமி, ஐயப்பன், பரமேஸ்வரி, நந்தகுமார், பரத், ஜீவா, ராஜேஷ், விஜய் உட்பட பல மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.