மீனாட்சி அம்மன் கோவிலைத் தகர்ப்போம்.. தீவிரவாத அச்சுறுத்தலால் மதுரையில் தீவிர பாதுகாப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுதந்திர தினத்தன்று தகர்ப்போம் என்று வந்துள்ள தீவிரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மதுரை முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இமெயில் மிரட்டல்
மீனாட்சி அம்மன் கோவிலில் சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும் என்று இமெயில் மூலம் தகவல் வந்துள்ளதால் கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல மடங்கு பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில்
அதேபோல சுதந்திர தினத்தையொட்டி வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெற்று விடக் கூடாது என்பதால் மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. மதுரை ரயில்வே சந்திப்பில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் சோதனை
அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. பிளாட்பாரங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன.
விமான நிலையத்தில்
அதேபோல மதுரை பெருங்குடியில் உள்ள விமான நிலையத்திலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.