அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..2500 போலீஸார் குவிப்பு.. பதற்றம்!
மதுரை, அலங்காநல்லூரில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
மதுரை: அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக கிராம மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி 2500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை, வாடிவாசலை விட்டு விலக மாட்டோம் எனக் கூறி அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அவசர சட்டம் உதவியோடு அங்கு இன்று காலை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
எனினும், உள்ளூர் மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாட்டோம் என கூறிவிட்டனர். அத்துடன், அலங்காநல்லூர் வாடிவாசலை விட்டு விலகாமல் மக்கள் அங்கேயே கூடியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 25000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு நடத்த விடமாட்டோம் எனக் கூறி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. எந்நேரத்திலும் போலீஸ் தடியடி நடத்தியோ, கைது செய்தோ கூட்டத்தைக் கலைக்கலாம் எனக் கூறப்படுகிறது.