தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை – தூத்துக்குடி தீவுப்பகுதிகளில் தேடுதல் வேட்டை
தூத்துக்குடி: தமிழகத்திற்குள் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடியை சுற்றியுள்ள தீவு பகுதிகளில் கடலோட காவல்படையினர் முகாமிட்டு சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ம் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீசார், கடலோர காவல் படையினர், மரைன் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயத்தை தவிர்க்க மரைன் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகுகளில் 12 கடல் மைல தொலைவு வரை சென்று மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடலோட காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,
தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் மாவட்ட கடல் பகுதி வரை மொத்தம் 21 முக்கிய தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் அன்னியர்கள் யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா, ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள முயல் தீவு, காசுவாரி தீவு, வான் தீவு, காரிசல்லி தீவு உள்ளிட்ட பல்வேறு தீவுகளில் மரைன் போலீசார் சோதனை நடத்தி திரும்பியுள்ளனர்.
மரைன் போலீசார் அனைத்து படகுகளிலும் ரோந்தை அதிகரித்துள்ளனர். இதில் ஊர்காவல் படையை சேர்ந்த 50 பேருக்கு முதல் தடவையாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இது தவிர மேலும் பல்வேறு தமிழக கடற்கரை கிராமங்களில் கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அவர்களும் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். முழுமையான கண்காணிப்பில் கீழ் தமிழக கடற்கரை பகுதி இருப்பதால் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லை.
ஊடுருவ முயற்சி செய்தாலும் கூட மரைன் போலீசார் வளைத்து பிடிக்க தயார் நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏற்கனவே கடல் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.