செல்ஃபி புள்ளைங்களா நீங்க... உங்க முக அழகு சீக்கிரம் போயிருமாம்!
சென்னை: ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது... நின்னா செல்ஃபி, நடந்தா செல்ஃபி, சாப்பிட்டா செல்ஃபி என ஒரே செல்ஃபி புள்ளைங்களாகத்தான் இருக்கிறார்கள். மிக அபாயமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
செல்ஃபி மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை என்பதென்னவோ உண்மை. அடிக்கடி செல்ஃபி எடுப்பது முகத்திற்கு நல்லதில்லையாம். முகத்தில் சுருக்கம் விழுந்து சீக்கிரமே முதிய தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
மொபைலில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் முகத்தில் உள்ள செல்கள் பழுதடைந்து கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.

செல்ஃபி மோகம்
ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பின்னர், செல்ஃபி மோகம் அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் தலைவிரித்தாடுகிறது. ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், தோல் பாதிக்கும் என்று தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதிய தோற்றம்
செல்போன் மூலம் அடிக்கடி முகத்தை புகைப்படம் எடுக்கும்போது, இந்த ஒளிக்கதிர்களால் முகங்களில் சுருக்கம் ஏற்பட்டு, வயதுக்கு மீறிய தோற்றம் உண்டாகலாம். தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கதிர்வீச்சுகள் பாதிப்பு
மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (டிஎன்ஏ) அழித்து விடும். அதனால் தோல் விரைவில் வயதான தோற்றம் பெற்றுவிடும். சுருக்கங்கள் அதிகரித்து விடும் என்று நிபுணர்கள் கூறுவதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

நீல ஒளி பாதிப்பு
அதிகமாக செல்ஃபி எடுப்பவர்களும், பிளாக்கில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டும். ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல ஒளி கூட நமது தோலை பாதிக்கும் என்கிறார் இங்கிலாந்தின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவ இயக்குநர் சைமன் ஜோவாகி

விதம் விதமாய் செல்ஃபி
செல்ஃபி எடுக்கும் போது, எந்த கையால் போனை பிடித்து கொண்டு படம் எடுக்கிறீர்கள் என்பதை, உங்கள் முகத்தை பார்த்தே மருத்துவர்களால் கூறமுடியும் என்கின்றனர். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்து கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர்.

மாசடையும் திசுக்கள்
நிறைய செல்ஃபி எடுப்பவர்களின் முகத் திசுக்கள் ஒரு பக்கம் மாசடைந்திருக்கும். முகத்தின் ஒரு பக்கத்தில் உங்களால் அதை பார்க்க முடியாது. இதை தடுக்க வேண்டியது அவசியம். தோலில் உள்ள தாதுக்களை காந்த அலைகள் மாற்றி விடுகின்றன. ‘சன்ஸ்கிரீன்' போன்ற சாதனங்கள் எல்லாம் உங்களை பாதுகாக்காது என்று எச்சரிக்கிறார் அமெரிக்க ‘ஒபாகி ஸ்கின் ஹெல்த் இன்ஸ்டிடியூட்' நிறுவனர் ஜியின் ஒபாகி.

அதிகரிக்கும் ஆபத்து
மொபைலில் இருந்து வெளிப்படும் LED ஒளி, ஆக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டாம்.

குழந்தைகளுக்கும் பாதிப்பு
இன்றைக்கு 3 வயதுக் குழந்தைகள் கூட செல்ஃபி எடுக்கின்றனர். செல்போனை குழந்தைகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். அழகு முகத்தை அடிக்கடி செல்ஃபி எடுத்து அதை அலங்கோலம் ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.












Click it and Unblock the Notifications