பாசத்துடன் அனைவரிடமும் பழகுவார் பவானி.. பக்கத்து வீட்டுக்காரர்கள் நெகிழ்ச்சி
சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரை பறிகொடுத்த பவானி தேவி (38), மிகவும் அமைதியான, அன்பான பெண் என்று கூறுகின்றனர் அவரது பக்கத்து வீட்டில் வசிப்போர். அவரது இரு குழந்தைகளும் தாய் இல்லாத அநாதையாகிவிட்டதே என்று வேதனைப்படுகின்றனர் உறவினர்கள்.
சென்னை பார்டர் தோட்டம், பகுதியிலுள்ள பூ பேகம் 2வது சந்து பகுதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில்தான் பாலன், அவரது மனைவி பவானி தேவி, மற்றும் இரு குழந்தைகள் வசித்து வந்தனர். அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று சென்று கொண்டிருந்த இவர்கள் குடும்பத்தில்தான் பெங்களூரு குண்டு வெடிப்பு புயலை கிளப்பியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு சர்ச் தெரு பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பவானி தேவி மண்டை ஓடு உடைந்து பரிதாபமாக இறந்தார்.

இரு குழந்தைகளுடன் இனிதான வாழ்க்கை
பவானிதேவியின் கணவர் பாலன் டயர் தொழில் செய்து வருகிறார். இத்தம்பதிக்கு பரத் என்ற 15 வயது மகனும், லட்சுமி என்ற 11 வயது மகளும் உள்ளனர். பரத், எஸ்.எஸ்.எல்.சியும், லட்சுமி, ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இரு குழந்தைகள் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தார், பவானிதேவி. குழந்தைகளிடம் எரிந்துவிழுவதோ அவர்களை அடிப்பதோ கிடையாது. கண்களுக்கு இமை போல தனது குழந்தைகளை பாசத்தோடு பார்த்துக்கொண்டவர் பவானி தேவி என்கின்றனர் அவரது உறவினர்கள்.

வீட்டு ஓனர்
பவானி தேவி குடியிருந்த வீட்டு உரிமையாளர் முத்துசாமி இதுகுறித்து கூறுகையில், "பக்கத்து தெருவுல பாலனுக்கு சொந்த வீடு இருக்கு. ஆனா, பாலன் குடும்பம் எங்க வீட்டில்தான் வாடகைக்கு இருந்தாங்க. ஞாயிற்றுக்கிழமை ராத்திரி 9 மணி இருக்கும், பாலன் பதற்றத்தோட அவரோட வீட்டு கதவ பூட்டிகிட்டிருந்தாரு. எதுக்கு வீட்ட பூட்டுறீங்கன்னு கேட்டேன். பவானிக்கு குண்டு வெடிப்பில் அடிபட்டுடிச்சி, நான் அவசரமா பெங்களூரு போறேன், அப்படீன்னார். கூடுதல் தகவல் கேட்டதற்கு, டிவியை பாருங்க, நான் அவசரமா போறேன்.. அப்படீன்னு கிளம்பி போய்ட்டார்.

இறந்து போயிடுச்சின்னாங்க..
நானும் டிவி செய்தி சேனலை பார்த்தேன். பவானி ஆபத்தான கட்டத்தில் இருக்காரு, அப்படீன்னு முதல்ல செய்தி வந்துச்சி, பிறகு இறந்துட்டாருன்னு செய்தி வந்தது. பவானி ரொம்ப அமைதியான சுபாவம் உள்ள பெண்" என்றார் முத்துச்சாமி.

பக்கத்து வீட்டு 'அம்மா'
பக்கத்து வீட்டில் வசிக்கும் வெண்ணிலா என்பவர் கூறுகையில், "பாலன் குடும்பம் எங்க பக்கத்து வீட்டுக்கு வந்து 8 மாசம்தான் ஆச்சி. பவானி தேவி ரொம்ப தங்கமான பொண்ணுங்க. பக்கத்துல உள்ள எல்லாரு கிட்டயும் ரொம்ப நல்லா பழகுங்க. என்னை அம்மா அப்படீன்னுதான் கூப்பிடும். பவானிதேவியோட அம்மா குடும்பம் டி.நகருல இருக்கு. 'எனக்கு அங்க ஒரு அம்மா.. இங்க ஒரு அம்மா' அப்படீன்னு என்னப் பாத்து உரிமையோட கூப்பிடும் அந்த பொண்ணு" என்று கண்ணீருடன் நினைத்துப் பார்க்கிறார் வெண்ணிலா.

ஆதரவற்ற குழந்தைகள்
பவானி தேவியின் மகளுக்கு இப்போதுதான் 11 வயதாகிறது. அந்த குழந்தை, இளம் வயது அடையும்போது தாயின் அரவணைப்பும், ஆலோசனைகளும் பெரிதும் தேவைப்படும். மூத்த மகன் என்பதால் தாயின் அரவணைப்பில் செல்லமாக வளர்ந்தவன் பரத். அவனும் தனது தாய் மடி தேடி, தவிக்கிறான். ஆனால் குண்டு வைத்த கயவர்களுக்கு, மனித மனங்களின் ரணங்கள் தெரிய வாய்ப்பில்லை. மனித மிருகங்கள் தங்களது ரத்த பசியை தீர்க்க ஓடும்வேளையில், அதன் கொடூர கால்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போவது என்னவோ, அப்பாவிகளின் விலை மதிப்பில்லாத உயிர்தான்.












Click it and Unblock the Notifications