ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த சிவராஜ் சிங் சவுகான்
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவராஜ்சிங் சவுகான், ஆண்டாள் அவதரித்த நந்தவனம் அதன் பின்பு வடபத்ர சாயி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். உலக நன்மைக்காகவும் இந்திய மக்கள் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து விடுபடவும் ஆண்டாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர், பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். நேற்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சென்ற அவருக்கு ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஆண்டாளை தரிசனம் செய்த சிவராஜ் சிங் சவுகான், ஆண்டாள் அவதரித்த நந்தவனம் அதன் பின்பு வடபத்ர சாயி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம் முன்பு தனது மனைவியுடன் படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், தான் உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தி வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை வந்திருப்பதாகவும் கூறினார்.
சுதந்திரம் அடைந்த பின்பு ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த முதல் முதலமைச்சர் என்ற அடிப்படையில் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளதாக நீங்கள் கூறியிருப்பது மகிழ்ச்சி. பாரதத்தைவிட்டு கொரோனா என்ற கொடிய நோயை விரட்ட ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் வழிபாடு செய்திருக்கிறேன் என்றார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்ததை முன்னிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அங்கே, கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சியிருக்கும் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அனைவரும் காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவராஜ் சிங் சவுகான் வருகையை முன்னிட்டு ஆண்டாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.