தீபாவளி நேரத்தில் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்துவதா?: தா. வெள்ளையன்
தீபாவளி நேரத்தில் வணிகர்களை கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்வதால், வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே கடையடைப்பு செய்து உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது, அவர்களது ஜனநாயக உரிமை என்று எமது பேரவை கருதுகிறது.
அதே நேரத்தில் சில பகுதிகளில் மீண்டும், மீண்டும் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தும் நிலை இருப்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். தீபாவளி நேரத்தில் கடையடைப்பு செய்வதால், வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
அடிக்கடி கடையடைப்பு என்பது போராடும் தங்களது நோக்கத்தை சிதைத்துவிடும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும். அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் இதுகுறித்து தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக்கொள்கிறது என்று த.வெள்ளையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications